

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரான் மும்பை பயணத்தை நிறைவு செய்துவிட்டு, தில்லிக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் நடைபெறும் செய்யறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்க மத்திய அரசின் அழைப்பை ஏற்று கஜகஸ்தான், ஸ்பெயின் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரான் மற்றும் அவரின் மனைவி பிரிஜிட் மேக்ரான் ஆகியோர் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், மும்பை நகரத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 17) வந்தடைந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். மேலும், இருநாடுகளுக்கு இடையேயான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையடுத்து, அதிபர் மேக்ரான் மற்றும் அவரின் மனைவி பிரிஜிட் ஆகியோர் இந்தியாவின் மூத்த திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் விருந்தில் கலந்துகொண்டனர். இந்த விருந்தில், இந்திய சினிமா, கலாசாரம் குறித்த உரையாடல்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், செவ்வாய்க்கிழமை இரவு அதிபர் மேக்ரான் அவரது மனைவியுடன் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய சின்னமான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை நேரில் பார்வையிட்டார். இதனால், அந்த ரயில் நிலையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில், மும்பை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை செய்யறிவு மாநாட்டில் பங்கேற்க தில்லிக்குப் புறப்பட்ட அதிபர் மேக்ரானை மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் நேரில் வழியனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.