/

ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு

ஆந்திரப் பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 18 பேர் பலி

News image
பட்டாசு ஆலையில் வெடி விபத்து- விடியோ க்ளிப்
Updated On :28 பிப்ரவரி 2026, 11:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆந்திரப் பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 18 பேர் பலியாகினர்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சமர்லகோட்டா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை (பிப். 28) மதியம் 2 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சுமார் 18 பேர் பலியானதாகவும், 8 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானோரில் பெரும்பாலும் பெண்கள்தான் என்று கூறப்படுகிறது.

கோதாவரி கால்வாய்க்கு அருகே அமைந்திருந்த இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால், அப்பகுதி முழுவதும் அடர் கரும்புகை பரவியது. வெடிச் சத்தம் சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு கேட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அலமாரி ஒன்று விரிசல் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

விதிகளை மீறி பட்டாசு ஆலை செயல்பட்டதால்தான், இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடி விபத்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், சம்பவ இடத்தில் மாநில உள்துறை அமைச்சர் அனிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.