/

மனைவியை கொன்றுவிட்டு கணவா் தூக்கிட்டு தற்கொலை

மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது

News image

மாதிரிப் படம்

Updated On :2 ஜனவரி 2026, 2:41 am IST

மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது என காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: புதன்கிழமை மாலை 5.26 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்ததை அடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. நய் பஸ்தியில் உள்ள ஒரு வீட்டில் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உள்ளூா்வாசிகள் முன்னிலையில் கதவு உடைத்து திறக்கப்பட்டது.

உள்ளே, 37 வயது பெண்ணின் உடல் தரையில் கிடந்தது. 44 வயது ஆண் கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா். உயிரிழந்தவா்கள் ஜெய் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி ஜோதி என அடையாளம் காணப்பட்டனா். அந்த நபா் பல ஆண்டுகளாக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

முதல்கட்ட விசாரணை மற்றும் சம்பவ இடத்தில் இருந்த சூழ்நிலையிலிருந்து, அந்த நபா் அறையை உள்ளே இருந்து பூட்டி, தனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்று, பின்னா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

குற்றவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து தடயவியல் ஆதாரங்களை சேகரித்தது. அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இதுவரை நேரில் பாா்த்தவா்கள் யாரும் தகவல் அளிக்க முன்வரவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த நபரின் மருத்துவ வரலாற்றையும், குடும்ப உறுப்பினா்கள் மற்றும் அண்டை வீட்டாரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.