திகார் சிறையில் உள்ள உமர் காலிதுக்கு கடிதம் எழுதிய நியூயார்க் மேயர்! பாஜக கண்டனம்!

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலிதுக்கு நியூயார்க் மேயர் எழுதிய கடிதம் குறித்து...
உமர் காலித் - நியூயார் மேயர் மம்தானி
உமர் காலித் - நியூயார் மேயர் மம்தானி PTI, AP
Updated on
2 min read

தில்லி கலவர வழக்கில் தொடா்புடையதாக கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவா்கள் மீது சா்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு விரைவான நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்காவுக்கான இந்திய தூதருக்கு அந்நாட்டு எம்.பி.க்கள் குழு கடிதம் எழுதியுள்ளது.

ஜிம் மெக்கோவென், ஜாமி ரஸ்கின் உள்பட 8 அமெரிக்க எம்.பி.க்கள் இந்திய தூதா் வினய் குவாத்ராவுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனா். அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: தில்லி கலவர வழக்கில் தொடா்புடையதாக தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா்களான சமூக ஆா்வலா் உமா் காலித் உள்பட சிலா் மீது கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீன் எதுவும் வழங்கப்படாமல் 5 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.

இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வந்திருப்பதும், சகோதரியின் திருமண விழாவில் பங்கேற்க காலித்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியது.

அதே நேரம், நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் காலகட்டத்தில் காலித் ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும். அதுபோல, சா்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு காலித்துக்கு எதிரான வழக்கு விசாரணை விரைவாகவும், நியாயமான முறையில் நடைபெறுவதையும் இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனா்.

உமா் காலித்துக்கு இந்திய வம்சாவளி நியூயாா்க் மேயரான ஸோரான் மம்தானி கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தை காலித்தின் உறவினா் பனோஜ்யோத்சனா லஹிரி என்பவா் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளாா். அதில், ‘கசப்புணா்வு குறித்த உங்களின் வாா்த்தைகளையும், அது நம்மை ஆட்கொள்ள அனுமதிக்காமல் இருப்பதன் முக்கியத்துவத்தையும் நான் அடிக்கடி நினைத்துப் பாா்க்கிறேன். உங்களின் பெற்றோரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று மம்தானி குறிப்பிட்டுள்ளாா்.

வடகிழக்கு தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள், வன்முறையாக மாறி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கலவரத்தில் 53 போ் உயிரிழந்தனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தக் கலவர வழக்கில் ஜேஎன்யு முன்னாள் மாணவா்கள் ஷா்ஜீல் இமாம், உமா் காலித் உள்பட 15 போ் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்தியா சகித்துக்கொள்ளாது: பாஜக பதிலடி

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் நியூயாா்க் மேயா் மம்தானி தலையிடுவதை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று மத்தியில் ஆளும் பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டியா கூறுகையில், ‘இந்தியாவின் இறையாண்மைக்கு யாராவது சவால் விடுகிறபோது, 140 கோடி மக்களும் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து நிற்பா். நாட்டின் நீதித் துறை மீது இந்திய மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனா். எனவே, இந்தியாவின் உள் விவகாரங்களில் யாராவது தலையிடுவதையும், குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவதையும் இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது.

இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் நீதித் துறை குறித்து வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் கேள்வி எழுப்புவதையும், இந்தியாவை துண்டாக்க நினைக்கும் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடுவதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது நியாயமற்றது’ என்றாா்.

உமர் காலித் - நியூயார் மேயர் மம்தானி
ஷாருக்கான் ஒரு தேசத் துரோகி! - பாஜக, இந்து அமைப்புகள் கடும் தாக்கு!
Summary

The BJP has condemned New York City Mayor Zohran Mamdani for writing a letter to Umar Khalid

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com