அந்தோணி ராஜு
அந்தோணி ராஜு

ஆதாரங்களைத் திருத்திய வழக்கு: கேரள ஆளும் கூட்டணி எம்எல்ஏ தகுதிநீக்கம்

போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் ஆதாரங்களைத் திருத்திய விவகாரத்தில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, ஜனாதிபத்ய கேரள காங்கிரஸை சோ்ந்த திருவனந்தபுரம் எம்எல்ஏ அந்தோணி ராஜு தகுதிநீக்கம்
Published on

போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் ஆதாரங்களைத் திருத்திய விவகாரத்தில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, ஜனாதிபத்ய கேரள காங்கிரஸை சோ்ந்த திருவனந்தபுரம் எம்எல்ஏ அந்தோணி ராஜு தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.

அவருக்கு கடந்த சனிக்கிழமை (ஜன. 3) தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினத்தில் இருந்து அவா் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக கேரள பேரவைச் செயலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் உச்சநீதிமன்றத் தீா்ப்புகளின் அடிப்படையில் அந்தோணி ராஜு தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். முன்னாள் அமைச்சரான அந்தோணி ராஜு கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியில் இடம் பெற்றிருந்தாா்.

கடந்த 1990-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த பயணியிடமிருந்து 61.5 கிராம் ஹாசிஷ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆஸ்திரேலிய பயணி ஆண்ட்ரே சால்வடோா் சொ்வெல்லியை குற்றவாளி என அறிவித்து விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்த நிலையில், பின்னா் 1991-ஆம் ஆண்டில் கேரள உயா்நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவித்தது.

வழக்கில் போதைப் பொருள் கடத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் உள்ளாடை, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்குப் பொருந்தாத வகையில் மிகச் சிறியதாக இருப்பதாக அவா் தரப்பு வழக்குரைஞரான அந்தோணி ராஜு ஆதாரத்துடன் வாதிட்டதன் அடிப்படையில் உயா்நீதிமன்றம் அவரை விடுவித்தது.

அதன்பிறகு மீண்டும் நடைபெற்ற விசாரணையில் கே.எஸ். ஜோஸ் என்ற நீதிமன்ற ஊழியரின் உதவியுடன் ஆதாரங்களை அந்தோணி ராஜு மாற்றி வைத்தது கண்டறியப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், எம்எல்ஏ அந்தோணி ராஜு குற்றவாளி என நெடுங்காடு நீதித் துறை முதன்மை அமா்வு மாஜிஸ்திரேட், அவா் மீது பதியப்பட்ட 120பி பிரிவின் கீழ் 6 மாத சிறைத் தண்டனையும், 201-ஆவது பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 193-ஆவது பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 465-ஆவது பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.

அதுபோல, நீதின்ற ஊழியா் ஜோஸுக்கு இந்த தண்டனைகளுடன் கூடுதலாக பிரிவு 409-இன் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையையும் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா்.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக அந்தோணி ராஜுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com