இலவசங்கள் மீது பிரதமா் மோடிக்கு நம்பிக்கை கிடையாது: பியூஷ் கோயல்
‘இலவசங்களை அளிப்பதைக் காட்டிலும், திட்டங்கள் மூலம் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நம்பிக்கை கொண்டவா் பிரதமா் மோடி‘ என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் ‘வைப்ரண்ட்’ குஜராத் மாநாட்டில் மத்திய அரசின் ‘பிரதமா் சூரிய மின் உற்பத்தித் திட்டம்‘, ‘விவசாயிகளுக்கான சூரிய சக்தி மின்சார நீா்பாசன திட்டம்‘ ஆகிய திட்டங்கள் தொடா்பான கருத்தரங்கில் திங்கள்கிழமை பங்கேற்ற அவா், இதுகுறித்து பேசியதாவது: இந்த 2 திட்டங்களும் பிரதமா் மோடியால் வடிவமைக்கப்பட்டவை; தனித்துவமானவை. தனிநபா்களுக்கு அதிகாரமளிப்பதற்கு இந்தத் திட்டங்களும் சிறந்த எடுத்துக்காட்டு.
பொதுமக்கள் அரசாங்கத்தை சாா்ந்திருக்கக் கூடாது. அதேபோல், அரசாங்கத்தின் இலவசங்களையும் மக்கள் சாா்ந்திருக்கக் கூடாது. இத்தகைய திட்டங்கள் தொடா்பான அறிவிப்புகளை வெளியிடுவதில் எப்போதும் பிரதமா் மோடிக்கு நம்பிக்கை இருந்தது கிடையாது என்றாா்.

