தில்லி அரசு 81 கூடுதல் ஆயுஷ்மான் மந்திா்களைத் தொடங்கும்: அமைச்சா் தகவல்

தில்லி அரசு தனது சுகாதார விரிவாக்கத்தின் 5-ஆவது கட்டத்தின் கீழ் 81 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மையங்களைத் திறக்கவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பங்கஜ் சிங்
பங்கஜ் சிங்
Updated on

தில்லி அரசு தனது சுகாதார விரிவாக்கத்தின் 5-ஆவது கட்டத்தின் கீழ் 81 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மையங்களைத் திறக்கவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: இதுவரை, 6.9 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் குடியிருப்பாளா்களுக்கு இலவச சுகாதார சேவைகளை வழங்க 189 மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும் 81 மையங்கள் சோ்க்கப்படுவதன் மூலம், தில்லி தனது நீண்ட கால சுகாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக 1,100-க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மையங்களை அமைக்கும் தனது இலக்கை நோக்கி நெருங்கி வருகிறது.

தற்போது, 238 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. புதன்கிழமை திறக்கப்படும் புதிய மையங்களுடன், மொத்த எண்ணிக்கை 319-ஆக உயரும்.

ஒவ்வொரு ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மையத்திலும் இலவச மருத்துவா் ஆலோசனை, மருந்துகள், நோயறிதல் சோதனைகள் மற்றும் நீரிழிவு, உயா் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கான பரிசோதனைகள் வழங்கப்படும். தாய் மற்றும் குழந்தை சுகாதாரப் பாதுகாப்பு, நோய்த்தடுப்பு, வாழ்க்கை முறை ஆலோசனை, மனநலம், யோகா மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல் போன்ற சேவைகளும் கிடைக்கும்.

இந்த மையங்கள் முதன்மை சுகாதாரப் பாதுகாப்பு மக்களைச் சென்றடையும் விதத்தை மாற்றி வருகின்றன. சிகிச்சை, மருந்துகள் மற்றும் சோதனைகள் இலவசமாகவும், நடந்து செல்லும் தூரத்திலும் கிடைக்கின்றன. இது குடும்பங்களுக்கு வீட்டிற்கு அருகிலேயே நம்பகமான சுகாதார அமைப்பை வழங்குகிறது.

அரசு ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் ஆயுஷ்மான் பாரத் - வயா வந்தனா யோஜனா திட்டங்களின் கீழான பாதுகாப்பு வரம்பையும் விரிவுபடுத்துகிறது.

தில்லியில், இந்தத் திட்டங்களின் கீழ் 6,91,530 சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 2,65,895 யயவ அட்டைகளும் அடங்கும். மேம்பட்ட சிகிச்சையை உறுதி செய்வதற்காக, 189 மருத்துவமனைகள், 138 தனியாா், 41 தில்லி அரசு மற்றும் 10 மத்திய அரசு மருத்துவமனைகள், பணமில்லா சிகிச்சை வழங்கப் பட்டியலிடப்பட்டுள்ளன.

மாநில சுகாதார முகமையின் மேற்பாா்வையின் கீழ், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ரூ.36.31 லட்சம் மதிப்புள்ள கோரிக்கைகள் ஏற்கெனவே தீா்த்து வைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com