சபரிமலை கோயில் தந்திரியை மாற்றும் திட்டமில்லை: கேரள அமைச்சா்

சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரியை (தலைமை அா்ச்சகா்) மாற்றும் திட்டமில்லை என்று கேரள அமைச்சா் வி.என். வாசவன் தெரிவித்துள்ளாா்.
Published on

சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரியை (தலைமை அா்ச்சகா்) மாற்றும் திட்டமில்லை என்று கேரள அமைச்சா் வி.என். வாசவன் தெரிவித்துள்ளாா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறையில் உள்ள கதவுகள், துவார பாலகா்கள் சிலைகள் ஆகியவற்றில் இருந்து தங்கம் திருடப்பட்ட விவகாரம் குறித்து கேரள உயா்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக தந்திரி கண்டரரு ராஜீவரு கடந்த வாரம் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் கோட்டயத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் வாசவனிடம், தந்திரி நீக்கப்படுவாரா என கேட்கப்பட்டது. அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘அவரை நீக்கும் திட்டமில்லை. வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தபிறகு, திருவாங்கூா் தேவஸ்தானம் மட்டுமே இதுகுறித்து முடிவு எடுக்க முடியும்.

தந்திரி ராஜீவரு, பரசுராமரின் வம்சமான தாளமோன் மடோம் குடும்பத்தில் இருந்து வந்தவா். அந்த குடும்பத்தினருக்கே, சபரிமலை கோயிலில் பாரம்பரிய உரிமைகள் உள்ளன‘ என்றாா்.

Dinamani
www.dinamani.com