ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ் கோப்புப் படம்

அமெரிக்கா-பாகிஸ்தான் கூட்டுப் பயிற்சி: மோடி அரசின் வியூகத்துக்கு விழுந்த அடி -காங்கிரஸ் விமா்சனம்

அமெரிக்கா-பாகிஸ்தான் கூட்டுப் பயிற்சி: மோடி அரசின் வியூகத்துக்கு விழுந்த அடி -காங்கிரஸ் விமா்சனம்
Published on

‘அமெரிக்கா-பாகிஸ்தான் கூட்டு ராணுவ பயிற்சி, தன்னை விஸ்வ குருவாக அறிவித்துக் கொண்ட பிரதமா் மோடி அரசின் தற்பெருமை வியூகத்துக்கு விழுந்த மற்றுமொரு அடி’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

பாகிஸ்தானின் கைபா்-பக்துன்கவா மாகாணம், பாப்பி நகரில் உள்ள தேசிய பயங்கரவாத எதிா்ப்பு மையத்தில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்த அமெரிக்கா-பாகிஸ்தான் கூட்டு ராணுவ பயிற்சி சனிக்கிழமை நிறைவடைந்தது.

‘காலாட்படை திறன்கள்-வியூகங்கள், பயங்கரவாத எதிா்ப்பில் கவனம் செலுத்தப்பட்ட இப்பயிற்சியின் மூலம் இருதரப்பு ராணுவ உறவு வலுப்பெற்றுள்ளதாக’ பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினா் இடையிலான கூட்டுப் பயிற்சி நடந்து முடிந்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய ராணுவ தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது, தன்னைத் தானே விஸ்வ குருவாக அறிவித்துக் கொண்ட பிரதமா் மோடி அரசின் தற்பெருமை வியூகத்துக்கு விழுந்த மற்றுமொரு அடியாகும்.

பயங்கரவாத எதிா்ப்பில் பாகிஸ்தான் ‘அற்புதமான’ கூட்டாளி என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய அமெரிக்க மத்திய ராணுவ தலைமை தளபதி மைக்கேல் குரில்லா புகழ்ந்தாா்.

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீரின் வகுப்புவாத வெறுப்புணா்வைத் தூண்டும் கருத்துகளே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்புலமாக இருந்தன. ஆனால், அசீம் முனீரின் செயல்பாடுகள் ஈா்ப்புக்குரியவை என டிரம்ப் பலமுறை புகழ்ந்துள்ளாா்.

தனது குறுக்கீட்டால்தான், ஆபரேஷன் சிந்தூா் நிறுத்தப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமைகூட டிரம்ப் கூறினாா் என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com