

முக்கியமில்லாத (அற்பமான) பொதுநல மனு தாக்கலுக்காக ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிா்த்து தொடுக்கப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
மும்பை உயா் நீதிமன்ற நீதிபதியாக தேவேந்திர குமாா் உபாத்யாய (தற்போது தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவா்) கடந்த 2023-ம் ஆண்டு பதவியேற்கும்போது, தனது பெயரை தெரிவிக்கும் முன்பு ‘நான்’ என்று சொல்லத் தவறி விட்டதாகவும், இது அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது, ஆதலால் அவரை மீண்டும் பதவியேற்க உத்தரவிட வேண்டும் எனக் கூறி, உச்சநீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமா்வில் வழக்கறிஞா் அசோக் பாண்டே மனு தாக்கல் செய்தாா். இதை விசாரித்த நீதிபதிகள், முக்கியமில்லாத மனுவை தாக்கல் செய்ததாக கூறி, அசோக் பாண்டேக்கு அபராதம் விதித்தனா்.
இந்நிலையில், தனக்கு நீதிபதிகள் ரூ.25 ஆயிரம்தான் அபராதம் விதித்ததாகவும், ஆனால் அதற்குப் பதில் ரூ.5 லட்சம் செலுத்தும்படி மாவட்ட ஆட்சியா் தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டி, உச்சநீதிமன்றத்தில் அசோக் பாண்டே மீண்டும் மனு தாக்கல் செய்தாா்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, ஜய்மால்ய பாக்சி அமா்வு, இது விளம்பரத்திற்காக தொடுக்கப்பட்ட மனு என கூறி தள்ளுபடி செய்தனா்.