எம்பிபிஎஸ் சோ்க்கை விவரங்கள்: ஜன. 31 வரை அவகாசம்
நிகழ் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணைய வழியே வருகிற 31-ஆம் தேதி வரை பதிவேற்றலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டில் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையப் பக்கத்தில் பதிவேற்ற வேண்டியது அவசியம்.
அதன்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட கலந்தாய்வு மற்றும் காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு மூலம் சோ்க்கப்பட்ட மாணவா் விவரங்களை என்எம்சி தளத்தில் பதிவேற்ற வரும் 15-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அது 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

