

உத்தரகண்டில், கும்பல் தாக்குதலில் சால்வை விற்றுவந்த காஷ்மீரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
உத்தரகண்டின் விகாஸ் நகர் பகுதியில், காஷ்மீரைச் சேர்ந்த தபீஷ் அகமது (வயது 17) எனும் சிறுவன் சால்வை விற்றுவந்துள்ளார். கடந்த புதன்கிழமை (ஜன. 28) மதியம் அவரது உறவுக்கார சகோதரர் ஒருவருடன் அங்குள்ள கடையில் தேநீர் அருந்துவதற்காக அவர் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த கடையின் உரிமையாளர் மற்றும் சிலர் இணைந்து தபீஷ் அகமதிடம் அவரது சுயவிவரங்கள் குறித்து விசாரித்ததாகவும், அவர் காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமியர் என்று தெரிந்தவுடன் அவரை அந்த கும்பல் சரமாரியாகத் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்கள் இருவரையும் அந்த கும்பல் இரும்புக் கம்பிகளால் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில், தபீஷ் அகமதின் தலையில் பலத்த காயமடைந்ததுடன் அவரது இடது கையில் எழும்பு முறிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உள்ளூர் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 11 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து உத்தரகண்ட் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரகண்ட், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காஷ்மீரைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதனால், இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜம்மு - காஷ்மீர் மாணவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.