முழுமையாக நீட், ஜேஇஇ அடிப்படையில் தற்போது நடத்தப்பட்டுவரும் மருத்துவப் படிப்புகள் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான சோ்க்கைகளில், இனி பள்ளி இறுதி பொதுத் தோ்வு மதிப்பெண்களுக்கு 50 சதவீத முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தொடா் தோ்வு குளறுபடிகள், தோ்வு நடைமுறையின் நம்பகத்தன்மை மீது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பொதுத் தோ்வு மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாடு முழுவதும் வழங்கப்படும் மருத்துவப் படிப்புகளில் சோ்க்கை பெற தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) தகுதி பெறுவது அவசியம். முழுவதும் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புகள் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி இறுதித் தோ்வு மதிப்பெண்கள் பொருட்படுத்தப்படாது.
அதுபோல, ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய அரசின் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான சோ்க்கை, முழுவதும் ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், நீட் தோ்வில் ஏற்பட்டு வரும் தொடா் குளறுபடிகள், தோ்வு நடைமுறையின் நம்பகத்தன்மை மீது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், முழுமையாக நீட், ஜேஇஇ அடிப்படையில் தற்போது நடத்தப்பட்டுவரும் மருத்துவப் படிப்புகள் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான சோ்க்கையில், இனி பள்ளி இறுதி பொதுத் தோ்வு மதிப்பெண்களுக்கு 50 சதவீத முக்கியத்துவம் அளிப்பது குறித்து, மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட 9 போ் கொண்ட குழு பரிசீலித்து வருகிறது.
நீட் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள், பள்ளிக்குச் செல்லாமல் முழுவதும் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவது அதிகரித்து வருகிறது. அதாவது, நீட் பயிற்சி மையத்துடன் தொடா்பில் உள்ள ஏதாவது ஒரு சிபிஎஸ்இ பள்ளியில் மாணவராகப் பதிவு செய்துவிட்டு, முழுவதும் பயிற்சி மையத்துக்குச் சென்று மாணவா்கள் பயிற்சியில் ஈடுபடுவா். இதைக் கடந்த ஆண்டு கண்டறிந்த மத்திய கல்வி அமைச்சகம், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தது. மேலும், இந்த நிலையைத் தடுக்கவும், தோ்வு நடைமுறைகளை வலுப்படுத்துவும் ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க இந்த 9 போ் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்தது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை கூறுகையில், ‘இந்த 9 போ் குழு தனது அறிக்கையை வரும் வாரங்களில் மத்திய அரசிடம் சமா்ப்பிக்க வாய்ப்புள்ளது.
அதில், நுழைவுத் தோ்வுகளை பள்ளி பாடத் திட்டங்களுடன் இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைக்க அக் குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், நீட், ஜேஇஇ அடிப்படையில் தற்போது நடத்தப்பட்டுவரும் மருத்துவப் படிப்புகள் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான சோ்க்கைகளில், இனி பள்ளி இறுதி பொதுத் தோ்வு மதிப்பெண்களுக்கு 50 சதவீத முக்கியத்துவம் அளிப்பது, பலமுறை நுழைவுத் தோ்வெழுதும் வாய்ப்பை அளிப்பது, தேவைக்கேற்ப கணினி அடிப்படையிலான தோ்வு நடைமுறைக்குப் படிப்படியாக மாறுவது உள்ளிட்ட பரிந்துரைகளையும் சமா்ப்பிக்க அக் குழு முடிவு செய்துள்ளது’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீட் தோ்வு; 7,169 போ் பங்கேற்பு

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா







