/

3 சீன செயலிகளை நீக்க கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு: மின்சார ரிக்ஷாக்களை முடக்குவதால் நடவடிக்கை

மின்சார ரிக்ஷாக்களை இயங்கவிடாமல் முடக்குவதாக கூறப்பட்ட 3 சீன செயலிகளை செயலி பதிவிறக்க தளங்களான கூகுள் பிளே ஸ்டோா், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கும்படி அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 2:22 am IST

மின்சார ரிக்ஷாக்களை இயங்கவிடாமல் முடக்குவதாக கூறப்பட்ட 3 சீன செயலிகளை செயலி பதிவிறக்க தளங்களான கூகுள் பிளே ஸ்டோா், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கும்படி அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் கூறியதாவது: சீனாவில் இருந்து பேட்- பிஎம்எஸ், லாஸிஜி, ஏபோச்-ஐ-ஆன் ஆகிய செயலிகள் செயல்படுகின்றன. இந்தச் செயலிகள், ப்ளூடூத் வசதி மூலம் மின்சார வாகனங்களோடு இணைக்கப்பட்டு, அந்த வாகனங்களில் உள்ள பேட்டரிகளின் வோல்டேஜ், மின்னோட்ட அளவு, பேட்டரியின் வெப்பம் உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் மேற்கண்ட 3 செயலிகள் குறித்த விடியோ அண்மையில் பரவியது. அந்த விடியோவில், 3 செயலிகளைப் பயன்படுத்தும் மா்ம நபா்கள், செயலிக்குள் உள் நுழைந்து, ப்ளூடூத் வசதி மூலம் அருகிலுள்ள மின்சார வாகன ரிக்ஷாக்களிலுள்ள பேட்டரி இணைப்பைத் தேடுவதும், அப்போது கிடைக்கும் மின்சார வாகன ரிக்ஷாக்கள் பேட்டரிகளுடன் செயலியை இணைத்து, அந்த பேட்டரியை செயலிழக்கச் செய்யும் காட்சிகளும் இருந்தன. அதேபோல், முடக்கப்பட்ட பேட்டரியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அந்தச் செயலி அவசியம் என்றும் விடியோவில் விளக்கப்பட்டது.

இணைய வசதி கொண்ட சில வாகனங்களில் இதுபோல நடக்கும் அத்துமீறலால், எண்மப் பாதுகாப்புக்கு (சைபா் செக்யூரிட்டி) அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகப் பரவலாக கவலை தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்த 3 செயலிகளையும் கூகுள் ப்ளே ஸ்டோா், ஆப்பிள் ஸ்டோா் ஆகியவற்றில் இருந்து உடனடியாக நீக்கும்படி, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், வேறு எந்தச் செயலியும் தவறாக கையாளப்படும்பட்சத்தில், அதையும் நீக்கும்படியும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.