பெங்களூரில் பெய்த கனமழையில் சாய்ந்த சந்தன மரத்தால் ஒருவருக்கு ரூ. 28 லட்சம் வெகுமதி கிடைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் சமீபமாக பெய்த கனமழையால் பலரும் பாதிக்கப்பட்டனர். பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்வது உள்பட பல்வேறு இன்னல்களும் ஏற்பட்டன.
இந்த நிலையில், பெங்களூரில் 85 வயதான என்.ஜி. கேசரி வளர்த்து வந்த சந்தன மரமும் சாய்ந்து விழுந்தது. இருப்பினும், சந்தன மரம் சாய்ந்து விழுந்ததில் அவருக்கு லாபமே கிட்டியது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக, என்.ஜி. கேசரியின் வீட்டின் முற்றத்தில் சந்தன மரத்தின் கன்று வளர்வதை அவர் கண்டுள்ளார். சந்தன மரம் எங்கு வளர்ந்தாலும், அது அரசுக்கே சொந்தம் எனக் கூறி, அதனைப் பிடுங்கியெறியுமாறு அக்கம்பக்கத்தினர் அறிவுரை கூறியுள்ளனர். இருப்பினும், அதனை என்.ஜி. கேசரி அகற்றவோ அழிக்கவோ முயலாமல், வளர்க்க முடிவு செய்தார்.
மேலும், சந்தன மரம் வளர வளர கடத்தல்காரர்கள் அச்சுறுத்தலால், சந்தன மரத்தைச் சுற்றி இரும்பிலான கூண்டையும் அமைத்தார். தொடர்ந்து, 40 ஆண்டுகளாக சந்தன மரத்தைப் பராமரித்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில்தான், பெங்களூரில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் புயலின் காரணமாக என்.ஜி. கேசரியின் சந்தன மரமும் சாய்ந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து, சாய்ந்து விழுந்த சந்தன மரம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார், என்.ஜி. கேசரி.
இதனையடுத்து, ஒரு டன் எடைகொண்ட அந்தச் சந்தன மரத்தை மதிப்பிடப்பட்டு, கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் விற்கப்பட்டது.
மதிப்புமிக்க அந்த மரத்தைத் தானே விற்கவோ அல்லது அப்புறப்படுத்தவோ முயற்சிப்பதற்குப் பதிலாக, கேசரி உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தார். அதிகாரப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றி, அந்த மரம் மைசூரில் உள்ள அரசு சந்தனக் கிடங்கிற்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு, அவர் தேவையான அனுமதியைப் பெற்றார்.
சந்தனத்தின் எடை சுமார் ஒரு டன் என அதிகாரிகள் கண்டறிந்தனர். அதுமட்டுமின்றி, சந்தன மரத்தின் விற்பனைக்குப் பிறகு மரத்தை பல ஆண்டுகளாகப் பராமரித்து வந்த என்.ஜி. கேசரிக்கும் சுமார் ரூ. 28 லட்சம் அளிக்கப்பட்டது.
மேலும், சந்தன மரத்தை அர்ப்பணிப்புடன் பாதுகாத்து வந்ததாக அவருக்கு கர்நாடக அரசின் சந்தன சிரோமணி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Summary
A Monsoon Surprise: A Fallen Sandalwood Tree Earned an 85-year-old Bengaluru man
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










