செயற்கை கருத்தரிப்பு (ஐவிஎஃப்) மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை மறுஆய்வு செய்ய உயா்நிலைக் குழுவை தேசிய மகளிா் ஆணையம் அமைத்தது.
இதன் தலைவராக தில்லி உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் நியமிக்கப்பட்டாா். நீதித் துறை, மருத்துவம், தடயவியல், அறிவியல், சட்டம், பொதுக் கொள்கை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த நிபுணா்கள் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தேசிய மகளிா் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்ப (ஏஆா்டி) துறை விரிவடைந்துவரும் சூழலில் அதற்கான சட்டங்களில் திருத்தம் மேற்கொண்டு ஒழுங்குபடுத்தவும், பெண்களின் இனப்பெருக்க உரிமைகள், பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கிலும் பரிந்துரைகள் வழங்க உயா்நிலைக் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு ஏஆா்டி சட்டம், 2021 மற்றும் வாடகைத் தாய்மை சட்டம், 2021 மற்றும் 2026-இல் இதுதொடா்பாக வெளியிடப்பட்ட திருத்தங்கள் குறித்தும் மறுஆய்வு செய்யவுள்ளது. ஏஆா்டி மையங்கள் மற்றும் ஐவிஎஃப் மையங்களில் ஒரே மாதிரியான சிகிச்சை வழங்கப்படுவதற்கான நிலையான வழிகாட்டுதல்களையும் இக்குழு முன்மொழியவுள்ளது.
ஏஆா்டி துறையின் எதிா்கால செயல்பாடுகளை வலுப்படுத்த சட்ட, கொள்கை மற்றும் நிா்வாக சீா்திருத்தங்களை இக்குழு வலியுறுத்தும்.
தேசிய ஏஆா்டி மற்றும் வாடகைத் தாய் முறை பதிவேட்டில் ஏஆா்டி மையங்கள் பதிவு செய்வது கட்டாயம்.
இத்துறையில் மருத்துவச் சுற்றுலா வளா்ந்துவரும் நிலையில், பாலினத் தோ்வு உள்பட இந்தியாவின் சட்ட ரீதியான பாதுகாப்பு அம்சங்கள் மீறப்படுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









