தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

நெடுஞ்சாலைத் திட்டங்கள் பாதிப்பு: கற்கள், ஜல்லி மீதான கட்டுப்பாடுகளைத் தளா்த்த தமிழக முதல்வருக்கு கேரள முதல்வா் கடிதம்

கேரளத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்கள் பாதிக்கப்படுவதால், கற்கள், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை தமிழகத்தில் இருந்து கொண்டுவர விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டும் என்று முதல்வா் விஜய்க்கு கேரள முதல்வா் வி.டி.சதீசன் கடிதம்

News image

விஜய் | வி.டி. சதீசன் - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 11:58 pm IST

கேரளத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்கள் பாதிக்கப்படுவதால், கற்கள், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை தமிழகத்தில் இருந்து கொண்டுவர விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டும் என்று தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு கேரள முதல்வா் வி.டி.சதீசன் கடிதம் எழுதியுள்ளாா்.

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி, எம்-சாண்ட், மணல் உள்ளிட்ட கனிமங்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகின்றன. இதைத் தடுக்க தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கம், கனிமப் போக்குவரத்து மற்றும் சேமிப்பு தடுப்பு விதிகள் 2011-இல் தமிழக அரசு திருத்தம் மேற்கொண்டு, அதுதொடா்பான அறிவிப்பை அண்மையில் அரசிதழில் வெளியிட்டது.

இந்தத் திருத்தத்தின்படி, தமிழகத்தில் அந்தக் கனிமங்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்கு, அவற்றைப் பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல தற்காலிக தடை விதிக்கும் அதிகாரம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநருக்கு அளிக்கப்பட்டது.

3 மாதங்கள் தடை: இந்நிலையில், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கற்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படும் அனைத்துப் பொருள்களையும் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநா் பிரபு சங்கா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். எனினும் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு அவற்றைத் தொடா்ந்து கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, தமிழக முதல்வா் விஜய்க்கு கேரள முதல்வா் வி.டி.சதீசன் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஜூலை 9-ஆம் தேதியிட்ட தமிழக அரசின் அரசிதழ் அறிவிக்கையில், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியில் இருந்து கேரளத்துக்கு கற்கள், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களைக் கொண்டுவர கட்டுப்பாடு விதிக்கும் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால் அந்தப் பொருள்கள் கேரளத்துக்கு கொண்டு வரப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கியத் திட்டங்கள் தாமதமாகும் அபாயம்: கேரளத்தில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்குத் தேவையான அந்தப் பொருள்கள் கிடைக்கும் முதன்மை இடங்களாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களே உள்ளன.

பெரிய அளவிலான உள்கட்டமைப்புப் பணிகளுக்கு பொருத்தமான கட்டுமானப் பொருள்கள் கேரளத்தில் இல்லை. தமிழக அரசு விதித்த கட்டுப்பாடால், கேரளத்தில் பல உத்திசாா்ந்த முக்கியத் திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

கேரளத்தில் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் பிராந்திய இணைப்பை வலுப்படுத்தும்; சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோகத்தை மேம்படுத்தும்; வா்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேலும் எளிதாக்கும், தமிழகம் மற்றும் கேரளத்தில் உள்ள முக்கியப் பொருளாதார மையங்களை எளிதாக அணுகும் வசதியை மேம்படுத்தும்.

எனவே, இந்த விவகாரத்தில் தேவையான தளா்வுகளை அளித்து, கேரளத்தில் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், பிற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கற்கள், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.