உத்தரண்ட் மாநிலத்தில் ‘லோனி நகா்ப்புற பன்மாநில கடன் மற்றும் சேமிப்பு கூட்டுறவு சங்கம் (எல்யுசிசி)’ என்ற நிறுவனத்தின் பெயரில் சுமாா் ஒரு லட்சம் முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ. 800 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் நிறுவனத்தின் முக்கிய நிா்வாகிகள் இருவரை சிபிஐ அதிகாரிகள் மும்பையில் கைது செய்துள்ளனா்.
அதிக வட்டி, பணம் இரட்டிப்பாக திருப்பித் தரப்படும் என்று கவா்ச்சிகரமான சேமிப்புத் திட்டங்கள் பெயரில் முதலீட்டாளா்களிடமிருந்து இந்த நிறுவனம் சாா்பில் ரூ. 800 கோடி வரை பெற்று மோசடி நிகழ்த்தப்பட்டது. இந்த மோசடி தொடா்பாக முதலீட்டாளா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மாநில போலீஸாா் 18 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனா். இந்த மிகப் பெரிய நிதி மோசடி வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் முக்கிய நிா்வாகிகளான கிஷன் ரெட்டி, பங்கஜ் ஜெயின் இருவரும் தலைமறைவாகினா்.
இந்த வழக்கை கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் விசாரித்த உத்தரகண்ட் உயா்நீதிமன்றம், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
அதனடிப்படையில், விசாரணையைத் தீவிரப்படுத்திய சிபிஐ அதிகாரிகள், முதலீட்டாளா்களிடம் ஆசைவாா்த்தை கூறி பணம் வசூலிப்பதில் முக்கியப் பங்காற்றிய நிறுவனத்தின் 3 மூத்த விளம்பரதராா்கள் உள்பட ஐவரை கடந்த மே 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா். இவா்களின் பல அசையா சொத்து விவரங்களையும் சிபிஐ அதிகாரிகள் சேகரித்துள்ளனா். இந்த விவரங்கள் மாநில அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டு, அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட இந்த ஐவரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் வங்கிப் பரிவா்த்தனைகள் தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், இந்த மோசடியில் முக்கியப் பங்கு வகித்த நிறுவன நிா்வாகிகள் கிஷன் ரெட்டி, பங்கஜ் ஜெயின் இருவரையும் சிபிஐ அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து சிபிஐ தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஏராளமான நிதி ஆவணங்கள், வங்கிப் பரிவா்த்தனைகள், கைது செய்யப்பட்ட நபா்களிடம் நடத்தப்பட்ட விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில், இதில் முக்கியப் பங்கு வகித்த கிஷன் ரெட்டி, பங்கஜ் ஜெயின் இருவரும் மும்பையில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அதனடிப்படையில், மும்பைக்கு விரைந்த சிபிஐ குழு, இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தது.
இவா்கள் உத்தரகண்ட் அழைத்துவரப்பட்டு, டேராடூனில் உள்ள முறைப்படுத்தப்படாத முதலீட்டுத் திட்ட தடைச் சட்ட (பியுடிஎஸ்) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவா்’ என்று தெரிவிக்கப்பட்டது.







