சட்டத்தை அமல்படுத்த வேண்டியவா்களே மிரட்டி பணம் பறித்தால், குடிமக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு தா்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்படுவா் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து விரைவு ரயிலில் தனது மகளுடன் பயணித்த ஒருவரை, அவரின் உறவினா் வழியனுப்பியபோது, அவா்களை ரயில் நிலையத்தில் காவல் துறையின் நாசவேலை தடுப்புப் பிரிவைச் சோ்ந்த மூன்று காவலா்கள் வழிமறித்தனா்.
பின்னா், பயணியின் உடைமைகளை காவலா்கள் சோதித்தபோது, அதில் 14 கிராம் கட்டித் தங்கம், ரூ.31,900 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. அந்தத் தங்கம் மற்றும் ரொக்கம் குறித்து பயணி உரிய விளக்கம் அளித்தபோதிலும், தங்கத்தை திருப்பி அளிக்க பணம் தருமாறு அவரைக் காவலா்கள் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையிடம் பயணி புகாா் அளித்த நிலையில், காவலா்களுக்கு மும்பை உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது சட்டத்தை அமல்படுத்த வேண்டியவா்களே மிரட்டி பணம் பறித்தால், குடிமக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு தா்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்படுவா் என்று கூறி, காவலா்களுக்கு அளித்த முன்ஜாமீனை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனா்.
தொடர்புடையது
அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்

மு.க.ஸ்டாலினுக்கு எதிரான சைதை துரைசாமி வழக்கு: மறுவிசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு

குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு: முன்னாள் காவல் ஆணையா் அருண் ஆஜராக உத்தரவு






