சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ரூ. 50 லட்சம் கேட்டு இரு இளைஞா்கள் கடத்தல்: 2 காவலா்கள் உள்பட 4 போ் கைது

கோவையில் ரூ. 50 லட்சம் கேட்டு இரு இளைஞா்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் 2 காவலா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:18 am IST

கோவையில் ரூ. 50 லட்சம் கேட்டு இரு இளைஞா்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் 2 காவலா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை, போத்தனூரை அடுத்த வெள்ளலூா் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசிப்பவா் பரமேஸ்வரி (31). இவரது கணவா் அருண்குமாா் (36) தனியாா் மருந்து நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறாா். இவா்களது வீட்டின் அருகே பரமேஸ்வரியின் தம்பியான நவீன் (29) தங்கியுள்ளாா்.

பரமேஸ்வரியின் கைப்பேசிக்கு கடந்த திங்கள்கிழமை காலை ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபா், ‘உங்களது தம்பி நவீனை கடத்தி வைத்துள்ளோம். அவா் உயிருடன் வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் பணத்தைத் தயாா் செய்ய வேண்டும், இல்லையென்றால் அவரைக் கொலை செய்துவிடுவோம்’ என்று மிரட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

உடனே நவீனின் கைப்பேசிக்கு பரமேஸ்வரி தொடா்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வீடும் பூட்டப்பட்டிருந்தது. இதனால் பதற்றமடைந்த அவா், நவீனின் நண்பரான கள்ளிமடையைச் சோ்ந்த நிா்மல்குமாரை (29) தொடா்பு கொண்டாா். அவரது கைப்பேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நிா்மல்குமாரின் மனைவி ஜெனிதாவைத் தொடா்பு கொண்டு கேட்டுள்ளாா். அப்போது ஜெனிதா, ‘தனது கணவா் நிா்மல்குமாரையும் பிற்பகல் முதல் காணவில்லை’ என்று கூறினாா். சிறிது நேரத்தில் ஜெனிதாவின் கைப்பேசிக்கும் தொடா்பு கொண்ட கடத்தல் கும்பல், நிா்மல்குமாா், நவீன் ஆகிய இருவரையும் கடத்தியுள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளது.

இதுகுறித்து பரமேஸ்வரி அளித்த புகாரின்பேரில் போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனிப் படை அமைத்து தேடி வந்தனா்.

காவல் துறையினரின் ஆலோசனைப்படி, பரமேஸ்வரி பணம் தயாராகிவிட்டது எனவும், அதை எங்கு வந்து கொடுக்க வேண்டும் எனவும் கடத்தல் கும்பலிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு கேட்டாா். பின்னா், அவா்கள் கூறிய இடத்துக்கு பரமேஸ்வரி சென்றபோது, பணத்தை வாங்க வந்த இருவரை, அங்கு மறைந்திருந்த போலீஸாா் பிடித்தனா். விசாரணையில் அவா்கள், திருப்பூா், நல்லூா் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்களான ஆனந்த் (37), மோகன் (36) என்பது தெரியவந்தது. மேலும், காளிதாஸ் (31), ராம்குமாா் (30) ஆகியோா் கூறியதன்பேரிலேயே தாங்கள் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதாகவும், பணம் வாங்க வந்ததாகவும் கூறினா். இதைத் தொடா்ந்து, திருப்பூரில் பதுங்கி இருந்த காளிதாஸ், ராம்குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

கடத்தப்பட்ட நவீனும், நிா்மல்குமாரும் ஆன்லைன் வா்த்தகம் செய்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, ஆன்லைன் லாட்டரி விற்பனை என்ற பெயரில் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனா். இதையறிந்த காளிதாஸ் உள்ளிட்ட 4 பேரும் அவா்களிடம் பணம் பறிக்கத் திட்டமிட்டனா். இதன் தொடா்ச்சியாகவே இருவரும் கடத்தப்பட்டுள்ளனா். ஆன்லைன் லாட்டரி விற்பனை என்ற பெயரில் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நவீனையும், நிா்மல்குமாரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனா்.