பிரதமர் மோடியையும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பாஜகவையும் என்னை விட வேறு யாரும் அதிகமாக வெறுக்க முடியாது என்று ராமச்சந்திர குஹா கூறியதற்கு ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை வெறுப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அறிஞர்களை, கண்டித்திருக்கும் ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, கடந்த பத்தாண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றத்தின் அளவை விமர்சகர்கள் பெரும்பாலும் புறக்கணித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருடன் நடந்த அரசியல் விவாதத்தின்போது, மோடியையும் அமித் ஷாவின் பாஜகவையும் என்னை விட வேறு யாரும் அதிகமாக வெறுப்பதில்லை என்று கருத்து தெரிவித்த வரலாற்றாளர் ராமச்சந்திரன் குஹாவின் கருத்துக்களை வேம்பு வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.
மேலும், தாப்பரும் குஹாவும் பங்கேற்ற விவாதத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக ஆவதற்கான தகுதி குறித்து பேசப்பட்டது.
அந்தக் காணொலியைப் பகிர்ந்த ஸ்ரீதர் வேம்பு, சில வட்டாரங்களில் அறிவுஜீவி என்று அழைக்கப்படுவதற்கு மோடி வெறுப்பு கிட்டத்தட்ட ஒரு அடிப்படைத் தேவையாகிவிட்டது என்றும், இந்தியாவின் அண்மைக்கால வரலாற்றை மீண்டும் திரும்பிப் பார்ப்பதன் மூலம் இதுபோன்ற வாதங்களை பிரதமரின் ஆதரவாளர்கள் முறியடிக்க முடியும் என்று பதிவிட்டிருந்தார்.
2014-ஆம் ஆண்டில், பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாட்டின் பல பகுதிகள் கடுமையான சவால்களைச் சந்தித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரஸ் ஆட்சியின்போது, பஞ்சாப், ஜம்மு- காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் பாதுகாப்புச் சிக்கல்களை எதிர்கொண்டிருந்தன. நக்சல் கிளர்ச்சி கடுமையாக இருந்தது. பிகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மோடி தலைமையிலான அரசின் சாதனைகளைப் பாராட்டிய வேம்பு, அவற்றில் எதுவும் ஏதோ ஒரு மாயாஜால வித்தையால் சாதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.






