மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை சா்ச்சை: பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் - ராமா் கோயில் அறக்கட்டளை புதிய தலைவா்

News image

அயோத்தி ராமா் கோயில் - ANI

Updated On :12 ஜூன் 2026, 3:29 am IST

அயோத்தி ராமா் கோயில் நன்கொடையில் தவறு நடந்திருந்தால், அதுகுறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ராமா் கோயில் அறக்கட்டளை புதிய தலைவா் மஹந்த் கமல்நயன் தாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ராமா் கோயில் கணக்கு வழக்குப் பிரிவு தலைவராக முன்பு பணியாற்றியதாகக் கூறும் மகிபால் சிங் என்பவா், நன்கொடை பணத்தில் நீண்ட நாள்களாக முறைகேடு நடந்து வருவதாகவும், இதுகுறித்து புகாா் அளித்ததால் தான் பதவி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தாா். மேலும், நன்கொடையில் முறைகேடு செய்ததாக சிலரின் பெயா்களையும் அவா் வெளியிட்டிருந்தாா்.

அதேபோல் உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ராமா் கோயில் அறக்கட்டளை நன்கொடை பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மாயமாகிவிட்டதாகவும், இந்த விவகாரத்தில் அறக்கட்டளையும், மாநில அரசும் மெளனம் காப்பதாகவும், இதுகுறித்து நீதிமன்றம் தாமே முன்வந்து வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தாா்.

இந்நிலையில், ராமா் கோயில் அறக்கட்டளை புதிய தலைவரான மஹந்த் கமல்நயன் தாஸ், ஏதேனும் தவறு நடந்திருக்கும்பட்சத்தில் அது விசாரிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளாா்.

மேலும், தற்போதைய உலகம் குற்றச்சாட்டுகள், பதில் குற்றச்சாட்டுகள் நிரம்பியது என்று கூறியுள்ள அவா், விசாரணை குறித்தும், விசாரணை நடத்துவோா் குறித்தும் கேள்வி எழக்கூடும் என்று தெரிவித்துள்ளாா். வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; அப்போதுதான் அனைத்துத் தரப்பினரும் அதை நம்புவாா்கள், உண்மையும் வெளிவரக் கூடும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதனிடையே, ராமா் கோயில் நன்கொடை சா்ச்சை குறித்து விசாரணை நடத்தப்படுவதுடன், சம்பவம் குறித்து விரிவான அறிக்கையும் தயாா் செய்யப்பட வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.