ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 4 பேர் பலியாகினர்.
ஜார்க்கண்டில் ராம்கார் வனத்துறைக்குள்பட்ட சாப்ரி-பும்ரி பகுதியில் கைவிடப்பட்ட நிலக்கரிச் சுரங்கம் ஒன்று உள்ளது. அங்கு விஷவாயு கசிவு காரணமாக 4 பேர் பலியாகினர். மூடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தினுள் சட்டவிரோதமாக நிலக்கரி எடுக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
முதலில் ஒருவர் சுரங்கத்திற்குள் சென்றபோது விஷவாயு தாக்கி மயங்கிய நிலையில், அவரை மீட்கச் சென்ற மூவரும் ஒருவர் பின் ஒருவராக சுரங்கத்திற்குள் சென்று பலியானதாக நேரில் பார்த்த சாட்சி தெரிவித்துள்ளார்.
சுற்றுப்பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கு வந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினரும் மீட்புப் பணியினரும் அங்கு சென்று சுரங்கத்தினுள் இருந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சுரங்கத்தினுள் சென்ற 4 பேரும் பலியானது உறுதிசெய்யப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பலியான நால்வரின் உடல்களும் பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
ராம்கார் வனத்துறைக்குள்பட்ட பகுதிகளில் பல கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அங்கு, பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக நிலக்கரி எடுக்கச்சென்று பலியாவோர் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அரசு சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் மக்கள் உயிரைப் பணயம் வைத்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
Summary
4 killed by toxic gas in Jharkhand coal mine!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









