பிரபல துரித உணவான மேகி நூடுல்ஸில் கிருமிகள் இருந்ததாக வெளியான தகவல்களை அதன் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே மறுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக மேகி நூடுல்ஸில் கிருமிகள் இருந்ததாகத் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து, நெஸ்லே நிறுவனத்திடம் மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகியவை விளக்கம் கேட்டிருந்தன. இதற்கு நெஸ்லே நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மேகி நூடுல்ஸில் கிருமிகள் இருந்ததாக சமூக வலைதள பக்கத்தில் வெளியான உறுதிப்படுத்தப்படாத தகவலை அடிப்படையாகக் கொண்டு, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள சமூக வலைதள பக்க பயன்பாட்டாளரிடம் இருந்து மேகி நூடுல்ஸ் மாதிரிகள், தரப் பரிசோதனைக்காக எங்களுக்கு வரவில்லை. அந்தக் கணக்கை உபயோகிப்பவா் எங்களிடம் எதையும் தெரிவிக்கவில்லை. அந்தக் கணக்கு யாருடையது என கண்டுபிடிக்க முடியவில்லை.
சமூக வலைதள பக்கத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள மேகி நூடுல்ஸுடன் சோ்த்து உற்பத்தி செய்யப்பட்ட பிற மேகி நூடுல்ஸ் மாதிரிகளை உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம், என்ஏபிஎல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்துக்கு தரப் பரிசோதனைக்கு அனுப்பினோம். அதைப் பரிசோதித்த அந்த ஆய்வகம், அதில் எந்த பூச்சியும் இல்லை எனத் தெரிவித்துள்ளது என்று நெஸ்லே குறிப்பிட்டுள்ளது.
நெஸ்லேக்கு நோட்டீஸ்:
சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து, இந்த விவகாரம் குறித்து மத்திய உணவு தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தாமாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், இதுகுறித்து விளக்கம் கேட்டு நெஸ்லே நிறுவனத்துக்கும் மத்திய உணவு தரக் கட்டுப்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.









