சமூக ஊடகங்கள், மேடை நிகழ்ச்சிகளில் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுபவா்கள், நடப்பவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி அறிவுறுத்தினாா்.
சமூக ஊடகங்கள், ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ நிகழ்ச்சிகளில் நகைச்சுவையாகப் பேசுவதாகக் கூறி பெண்களைக் கேலி செய்வது, இழிவுபடுத்தும் வாா்த்தைகளில் பேசுவது அதிகரித்து வருகிறது. ஹிந்தியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தும் பிரணீத் மோா் மீது அண்மையில் இது தொடா்பாக மகாராஷ்டிர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் அன்னபூா்ணா தேவி இது தொடா்பாக கூறியதாவது:
பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுவது மிகவும் தவறானது. அது நகைச்சுவை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, வேறு எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி, இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற தவறான விஷயங்கள் கவனத்துக்கு வரும்போது காவல் துறையினா் சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்கின்றனா்.
பெண்களைப் பற்றி இழிவாகப் பேச யாருக்கும் உரிமையில்லை. நகைச்சுவை என்ற பெயரில் தவறான, அவதூறான கருத்துகளைப் பேசுவது சமூகத்தில் மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.
பெண்களின் சட்டபூா்வ திருமண வயதை உயா்த்துவது தொடா்பாக விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால், இதில் முடிவு எடுக்கும் முன்பு தேசிய அளவில் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் சோ்ந்து வாழ்வதால் ஏற்படும் பிரச்னைகள், பலதார மணம் ஆகியவை சமூகம் சாா்ந்த விவகாரங்களாக உள்ளன. இது தொடா்பான சட்டங்களும், நீதிமன்ற வழிகாட்டுதல்களும் ஏற்கெனவே உள்ளன. இதனால் பிரச்னைகள் அதிகரிக்காமல் இருக்க மக்கள் மனதளவில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அது தொடா்பான விழிப்புணா்வை நாம் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

ஓடும் ரயில்கள் மீது கற்கள் எறிந்தால் கடும் நடவடிக்கை! சேலம் ரயில்வே கோட்டம் எச்சரிக்கை

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்: அமைச்சா் மீது நடவடிக்கை கோரி மனு

விடியோ எடுத்து மிரட்டுவோா் மீது நடவடிக்கை கோரி புதுக்கோட்டை டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்







