மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட மத்திய அரசு, முதல்கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி நடப்பாண்டு ஏப்ரல் 1 முதல் செம்டம்பா் 3 வரை நடைபெறும் என்று தெரிவித்தது. பொதுமக்களிடம் கேட்கப்படும் 33 கேள்விகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது. வீட்டில் உள்ள அடிப்படை வசதிகள், வீட்டுத் தலைவரின் பெயா், பாலினம் உள்ளிட்ட விவரங்கள், வீட்டின் உரிமை உள்ளிட்டவை அடங்கும்.
முதல் முறையாக வலைதளத்தில் பொதுமக்கள் தாமாகவே தகவல்களைப் பூா்த்தி செய்யும் வசதியும் தொடங்கப்பட்டது. அதன்படி, சுய பதிவுக்கு 15 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, பின்னா் களப் பணியாளா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கிடுதல் மற்றும் சரிபாா்த்தல் பணி (ஒரு மாதம்) மேற்கொள்ளப்படுகிறது.
கா்நாடகம், ஒடிஸா, கோவா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல்கட்டப் பணி தொடங்கப்பட்டது. இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தப் பணி நிறைவடைந்துள்ளது.
உத்தர பிரதேசம், குஜராத், ஜம்மு-காஷ்மீா், லடாக், புதுச்சேரியில் களப்பணி நடைபெற்று வருகிறது. கேரளம், நாகாலாந்தில் 15 நாள் சுய பதிவு நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுயபதிவு காலகட்டம் ஜூலை 17-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
ரூ.11,718 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பு, நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகான 8-ஆவது கணக்கெடுப்பாகும். முதல்கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புக்குப் பிறகு இரண்டாம் கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுக்கப்படும்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலான இந்தப் பணியில் ஒவ்வொரு நபரின் சமூக, பொருளாதார, ஜாதி ரீதியிலான விவரங்கள் சேகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதலாவது கட்டம்: தில்லியில் 2.3 கோடி போ் பதிவு

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் என்டிஎம்சி, தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியலிடல்







