நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசின் முடிவை விமர்சிக்கும் வகையில் அந்நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
நீட் மறுதேர்வு வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிவை தடுக்கும் நோக்கில் டெலிகிராம் செயலிக்கு ஒருவார காலம் கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், ”உண்மையாகவே வினாத்தாள் கசிவைத் தடுக்க டெலிகிராமை முடக்குவதுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக்கா?” என தேசிய தேர்வு முகமைக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்த பதிவுக்கு டெலிகிராமின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் இருந்து கமெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
”ஒரு வணிக வளாகத்தில் திருட்டு நடக்கக் கூடும் என்பதால், நீங்கள் அனைத்து வணிக வளாகங்களையும் மூட வேண்டும். அத்துடன் ஒருவர் வேகமாக வாகனம் ஓட்டுவார் என்பதால், அனைட்து சாலைகளையும் மூடிவிடுங்கள்” என்று மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் டெலிகிராம் செயலி வாயிலாக முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறவுள்ளது.
நீட் மறுதேர்வை எந்தவித முறைகேடுமின்றி சுமூகமாக நடத்தி முடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அந்தவகையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-ன் படி டெலிகிராம் செயலிக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்த டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பாவெல் டுரோவ், இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையானது, 15 கோடி பயனர்களுக்கான தண்டனை எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Even roads and malls should be closed- Telegram's jibe
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











