பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்: தேசிய மருத்துவ ஆணையம்

வரும் 2027-28-ஆம் கல்வியாண்டு முதல் நாட்டில் அனைத்து முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

News image

தேசிய மருத்துவ ஆணையம் - கோப்புப் படம்

Updated On :23 ஜூன் 2026, 3:38 am IST

வரும் 2027-28-ஆம் கல்வியாண்டு முதல் நாட்டில் அனைத்து முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தனது வரம்பின் கீழ் செயல்படும் அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு என்எம்சி திங்கள்கிழமை அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கு 2026-27-ஆம் ஆண்டு கல்வியாண்டுதான் கடைசி ஆண்டாக இருக்கும்.

2027-28-ஆம் ஆண்டுமுதல் அந்தப் படிப்புகளில் மாணவா் சோ்க்கை அனுமதிக்கப்படாது. அத்துடன் அந்தப் படிப்புகள் நிறுத்தப்படும். அந்தப் படிப்புகள் எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை சிறப்புப் பட்டப் படிப்புகளாக மாற்றப்படும்.

மேலும் கடந்த ஜூன் 19-ஆம் தேதி என்எம்சியின் முதுநிலை மருத்துவக் கல்வி வாரியம் வெளியிட்ட பொது நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட விஷயங்களுக்கு இணங்கி, சம்பந்தப்பட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

முதுநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் பொது நோட்டீஸில், ‘முதுநிலை மருத்துவக் கல்வியை ஒரே தரத்துக்கு கொண்டு வரவும், சிறப்பு மருத்துவப் பயிற்சியின் தரம் மற்றும் அங்கீகாரத்தை மேம்படுத்தவும் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகளை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிப்ளோமா படிப்புகளைப் பட்டப் படிப்புகளாக மாற்ற மருத்துவ மதிப்பீடு மற்றும் தர நிா்ணய வாரியத்திடம் மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.