கர்நாடகத்தில் சாத்தியமாகுமா "தலித்' முதல்வர் கனவு?
கர்நாடகத்தில் வாக்குறுதிகளை அறிவித்து 2023-இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எவ்வித அரசியல் குழப்பமும் இல்லாமல் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


"கர்நாடகத்தில் மக்கள்தொகையில் எல்லா சமுதாயங்களைவிட அதிக எண்ணிக்கையில் (சராசரியாக 20 முதல் 22%) இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் இதுவரை முதல்வர் பதவி வகித்ததில்லை. இந்த ஏக்கம் அந்த சமுதாய மக்களிடையே நீண்ட காலமாகவே இருக்கிறது."
கர்நாடகத்தில் வாக்குறுதிகளை அறிவித்து 2023-இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எவ்வித அரசியல் குழப்பமும் இல்லாமல் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
முதல்வரான சித்தராமையாவும், துணைமுதல்வரான டி.கே. சிவகுமாரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வகிப்பர் என டி.கே.சிவகுமாருக்கு சித்தராமையா அளித்ததாகக் கூறப்படும் வாக்குறுதி எந்த வகையிலும் செயல்வடிவம் பெறவில்லை. இதனால் இரு தரப்பு ஆதரவு எம்எல்ஏக்களும் இரு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் கர்நாடகத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக முடியுமென்றால், அது காங்கிரஸ் கட்சியில் மட்டுமே சாத்தியம் என்ற புதிய வாக்குறுதியை அண்மையில் வெளியிட்டிருக்கிறார் முதல்வர் சித்தராமையா.
கர்நாடகத்தை 1947 முதல் 2026 வரை 23 முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான முதல்வர் பதவி வகித்தவர்கள் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஒக்கலிகர் சமுதாயத்தில் இருந்து கே.சி. ரெட்டி, கெங்கல் ஹனுமந்தையா, கடிதாள் மஞ்சப்பா, எஸ்.எம். கிருஷ்ணா, எச்.டி. குமாரசாமி; லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்த
எஸ். நிஜலிங்கப்பா, பி.டி. ஜட்டி, எஸ்.ஆர். கந்தி, வீரேந்திரபாட்டீல், எஸ்.ஆர். பொம்மை, பி.எஸ். எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை என 13 முதல்வர்கள் பதவியேற்றுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் இருந்து தேவராஜ் அர்ஸ் (அர்ஸ் உள்பிரிவு), எம். வீரப்பமொய்லி (தேவடிகா உள்பிரிவு), எஸ். பங்காரப்பா (ஈடிகா உள்பிரிவு, சித்தராமையா (குருபா உள்பிரிவு) ஆகிய 4 முதல்வர்களும்; பிராமணர் சமுதாயத்தை சேர்ந்த ஆர். குண்டு ராவ், ராமகிருஷ்ண ஹெக்டே ஆகிய இருவரும்; ராஜ்புத் (மராத்தி) சமுதாயத்தைச் சேர்ந்த என். தரம்சிங்கும் முதல்வர்களாக இருந்துள்ளனர்.
தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவில் லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் முதல்வர் பதவி வகித்துள்ளனர். அந்த அளவுக்கு இந்த இரு சமூகத்தினரும் அரசியலில் அதிக செல்வாக்கு படைத்தவர்களாக விளங்குகின்றனர். ஆனால், மக்கள்தொகையில் எல்லா சமுதாயங்களை விட அதிக எண்ணிக்கையில் (சராசரியாக 20 முதல் 22%) இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் இதுவரை முதல்வர் பதவி வகித்ததில்லை. இந்த ஏக்கம் அந்த சமுதாய மக்களிடையே நீண்ட காலமாகவே இருக்கிறது.
தப்பிய கனவு: 1970-களில் காங்கிரஸ் கட்சியில் புகழ்பெற்று விளங்கிய பி. பசவலிங்கப்பா, கன்னட இலக்கியம் தொடர்பாக தெரிவித்த கருத்தால் முதல்வராகும் வாய்ப்பை இழந்தார். ஆட்சி நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய கே.எச். ரங்கநாத்துக்கு, 1992 இல் முதல்வராகும் வாய்ப்பு வந்தபோது, அதை பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்த வீரப்பமொய்லிக்கு விட்டுக்கொடுத்தார்.
ஒன்பது முறை எம்எல்ஏ-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், உள்துறை அமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே இரு முறை முதல்வர் பதவி வாய்ப்பை இழந்திருக்கிறார். 1996 முதல் 1999 வரை எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்ட மல்லிகார்ஜுன கார்கே, 1999-இல் ஆட்சி அமைந்தபோது, முதல்வராகும் வாய்ப்பு எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு சென்றது.
2008-இல் மஜத ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அமைவதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. 8 ஆண்டுகாலம் காங்கிரஸ் மாநிலத் தலைவராக பணியாற்றி கட்சியை வளர்த்தெடுத்து, 2013இல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது தனது சொந்த தொகுதியில் ஜி. பரமேஸ்வர் தோல்வி அடைந்ததால், முதல்வர் வாய்ப்பு சித்தராமையாவுக்கு சென்றுவிட்டது.
இப்படி காங்கிரஸ் கட்சியில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த பலருக்கு முதல்வராகும் வாய்ப்பு கைகூடியபோதும் அந்தக் கனவு நனவாகமலேயே போய் விட்டது. பாஜகவில் கோவிந்த் கார்ஜோள், நாராயணசாமி போன்ற மூத்த தலித் தலைவர்கள் இருந்தாலும், அவர்களால் அமைச்சராக முடிந்ததே தவிர, முதல்வராக முடியவில்லை.
புதிய கனவு: இந்நிலையில், "கர்நாடகத்தில் தலித் ஒருவர் முதல்வராக வேண்டும் என்ற கனவு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாய அமைச்சர்கள் பலருக்கு உள்ளது. அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்திவரும் ஒக்கலிகர், லிங்காயத்து சமுதாயத்துக்கு எதிராக தலித் முதல்வர் கனவை இப்போது தூண்டி விட்டிருக்கிறார்' சித்தராமையா என்கின்றனர் அம்மாநில அரசியலை உற்று கவனிக்கும் ஆய்வாளர்கள்.
கர்நாடக சட்டப்பேரவையில் பட்டியலினத்தவருக்கு 36, பழங்குடியினருக்கு 15 இடங்கள் உள்ளன. 2023-இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸýக்கு 36-இல் 21 பட்டியலின எம்எல்ஏக்களும், 15-இல் 14 பழங்குடியினர் எம்எல்ஏக்களும் உள்ளனர். இவர்களில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வர், எச்.சி. மகாதேவப்பா, கே.எச். முனியப்பா, பிரியாங்க் கார்கே, ஆர்.பி. திம்மாப்பூர், பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த சதீஷ்ஜார்கிஹோளி ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த பி. நாகேந்திரா, கே.என். ராஜண்ணா இருவரும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
நனவாகுமா கனவு?: இந்நிலையில், முதல்வர் சித்தராமையா தூண்டுதலின்பேரில், தலித் முதல்வர் குறித்த விவாதங்கள் கர்நாடக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளன. முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்கும் முடிவை கட்சி மேலிடம் எடுக்கும்பட்சத்தில், அடுத்த முதல்வர் வாய்ப்பை தலித் அல்லது பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்க அந்தந்த சமுதாயங்களை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் அமைச்சர் சதீஷ்ஜார்கிஹோளி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து முறையிட்டுள்ளனர்.
இதையடுத்து, தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வர், எச்.சி. மகாதேவப்பா, கே.எச். முனியப்பா, பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த சதீஷ்ஜார்கிஹோளி ஆகியோர் முதல்வர் பதவிக்கு கனவு கண்டுவருகின்றனர். பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான 51 இடங்களில் 35 இடங்களில் வென்றுள்ளதால், பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினருக்கு முதல்வர் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளனர்.
சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து விலக்கும்போது எழும் அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வராக்குவது குறித்தும் கட்சி மேலிடம் ஆராய்ந்து வருகிறது. ஆனால், கர்நாடகத்தில் அதிக மக்கள்தொகை கொண்டவர்களாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் இருந்தாலும், அவர்களின் முதல்வர் கனவை நனவாக்க ஒக்கலிகர், லிங்காயத்து, பிற்படுத்தப்பட்டோர் சமுதாயங்கள் இசைவு தெரிவிப்பது கேள்விக்குறியே என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
இதையும் மீறி தலித் முதல்வர் கனவு நனவாகுமானால், அது 2028-இல் சாத்தியம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதற்காக, கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை அடைய பழங்குடியினத்தை சேர்ந்த சதீஷ்ஜார்கிஹோலி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 2028-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை அவரது தலைமையில் சந்திக்க நேர்ந்தால், சதீஷ்ஜார்கிஹோலிக்கு முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தபோதிலும் அதை காலம்தான் தீர்மானிக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...