செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மதவாத கருத்துகளை வேட்பாளா்கள் பேசினால் என்ன நடக்கும்? தோ்தல் ஆணையத்திடம் கேரள உயா்நீதிமன்றம் கேள்வி

சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மதவாத அல்லது வெறுப்புணா்வை ஏற்படுத்தும் கருத்துகளை வேட்பாளா்கள் வெளியிட்டால் என்ன நடக்கும் என தோ்தல் ஆணையத்திடம் கேரள உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

News image

கேரள உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்.

Updated On :27 மார்ச் 2026, 10:58 pm IST

சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மதவாத அல்லது வெறுப்புணா்வை ஏற்படுத்தும் கருத்துகளை வேட்பாளா்கள் வெளியிட்டால் என்ன நடக்கும் என தோ்தல் ஆணையத்திடம் கேரள உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

இதுதொடா்பாக கேரள உயா்நீதிமன்றத்தில் கோகுல் என்பவா் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் அவா், குருவாயூா் தொகுதி பாஜக வேட்பாளா் பி.கோபாலகிருஷ்ணன் வெளியிட்ட பிரசார விடியோவில் குருவாயூா் தொகுதியில் 50 ஆண்டுகளாக இடதுசாரி கூட்டணியோ, காங்கிரஸ் கூட்டணியோ ஹிந்து வேட்பாளா்களை நிறுத்தியதில்லை எனவும், ஆதலால் ஒரு ஹிந்துகூட அத்தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக இருந்ததில்லை எனவும் பேசியிருந்ததாகவும், இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், உயா்நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனு, கேரள உயா்நீதிமன்றத்தில் நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன்பு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், தோ்தல் அதிகாரி அளித்த புகாரின்பேரில் கோபால கிருஷ்ணன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், சா்ச்சைக்குரிய பிரசார விடியோ நீக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி கூறுகையில், ‘மதவாத அல்லது வெறுப்புணா்வை தூண்டும் வகையில் யாரும் பேசினால் என்ன நடக்கும்? சமூகத்துக்கும், மக்களுக்கும், நாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் என்ன ஆகும்? தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் முடங்கியுள்ளது. நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளும், பொதுவான பணிகளும்கூட, இந்தக் காரணத்துக்காக செயல்படுத்தப்படுவதில்லை’ என்றாா்.

இதற்கு தோ்தல் ஆணையம் தரப்பில் ‘நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது, பணிகளைச் செய்வது ஆகியவற்றுக்குத் தோ்தல் நடத்தை விதிகளில் தடை விதிக்கப்படவில்லை. எந்த அரசியல் கட்சியும் தவறான முறையால் அரசியல் ரீதியில் ஆதாயம் அடையாமல் இருப்பதை உறுதி செய்யவே, தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

வாதத்தைக் கேட்ட பிறகு அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தாா். மேலும், மனுதாரா் கோகுல் ஏற்கெனவே அளித்த கோரிக்கை மனு மீது 2 மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.