உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

பிகார்: கோயில் கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழப்பு

பிகார் கோயிலில் கூட்டநெரிசல் ஏற்பட்டது பற்றி...

News image

பிகார் கோயிலில் கூட்டநெரிசல்

ANI

Updated On :31 மார்ச் 2026, 6:59 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள கோயிலில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்தனர்.

இது குறித்து பிகார் ஷரீஃப் காவல் துறைக் கண்காணிப்பாளர் நூருல் ஹக் கூறியதாவது: நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஷீத்தலா மாதா கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களாவர்.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணியைத் தொடங்கினர்' என்றார்.

காவல் அதிகாரி இடைநீக்கம்: கோயில் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, தீப் நகர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியை உடனடியாக இடைநீக்கம் செய்வதாக நாளந்தா மாவட்ட காவல் துறை தெரிவித்தது.

மேலும், கூட்ட நெரிசலுக்கான காரணங்களைக் கண்டறிய கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரங்கல், நிவாரணம்: ராஜ்கிர் நகரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு பிகார் சென்றார். இந்நிலையில், அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "ஷீத்தலா மாதா கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் நிதீஷ் குமார் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கோயில் கூட்ட நெரிசல் சம்பவம் கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு மாநில அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.