நொய்டாவில் வரதட்சிணை கொடுமை காரணமாக மூன்றாவது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த 2024 டிசம்பர் மாதம், கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த ரித்திக் தன்வார் என்பவருக்கும் தீபிகாவுக்கும் (வயது 25) திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளான நிலையில், வரதட்சணை கொடுமை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தீபிகா தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த மத்திய நொய்டா காவல் துணை ஆணையர் தலைமையிலான போலீசார், தீபிகாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தீபிகாவின் காது, மூக்கில் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்தக் காயம் இருந்ததாக அவரது உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
வரதட்சிணை கொடுமை
தீபிகாவின் கணவரும், அவரது பெற்றோரும் வரதட்சிணை கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது:
”தீபிகாவுக்கு திருமணம் நடைபெற்ற போது, ரூ. 11 லட்சம் பணமாகவும், ரூ. 50 லட்சம் மதிப்பிலான நகைகளும், ஸ்கார்பியோ காரும், வீட்டு உபயோகப் பொருள்களும் வரதட்சிணையாக அளிக்கப்பட்டது.
தற்போது கூடுதலாக ரூ. 50 லட்சம் பணமும், ஃபார்ட்யூனர் காரும் வரதட்சிணையாக கேட்டு தீபிகாவை அவரது கணவரும் குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக, தீபிகா தனது தந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை போன் செய்து, வரதட்சிணை கேட்டு அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அன்று மாலையே உறவினர்களுடன் சென்று தீபிகாவின் தந்தை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அவர் வீடு திரும்பிய சில மணிநேரங்களில் தீபிகாவின் கணவர் தொடர்பு கொண்டு, தீபிகா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து நொய்டா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Summary
Dowry Harassment! Woman Commits Suicide by Jumping from 3rd Floor!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










