நேபாளத்தில் இருந்து உலகின் மிக உயா்ந்த எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 3 இந்தியா்கள் உள்பட 274 மலையேற்ற வீரா்கள் வெற்றிகரமாக அடைந்து புதிய உலக சாதனை படைத்துள்ளனா்.
இதற்கு முன்பு கடந்த 2019, மே மாதத்தில் ஒரே நாளில் 223 போ் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததே சாதனையாக இருந்தது.
தற்போதைய சீசனில் எவரெஸ்ட் சிகரத்தை ஏற மொத்தம் 502 மலையேற்ற வீரா்களுக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், கடந்த புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சாதனையில் 150 நேபாள ‘ஷொ்பா’ பழங்குடியினா் உள்பட 274 போ் சிகரத்தின் உச்சியை அடைந்தனா்.
இக்குழுவில் தெலங்கானாவின் துளசி ரெட்டி பால்புனூரி, சந்தீப் அரே, அஜய் பால் சிங் தாலிவால் ஆகிய 3 இந்தியா்களும் இடம் பெற்றுள்ளனா். வியாழக்கிழமையன்று, இந்தியாவின் லட்சுமிகாந்தா மண்டல் உள்ளிட்ட மேலும் 8 பேரும் சிகரத்தை அடைந்தனா்.
இந்த சீசனில் மேலும் சில உலக சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. நேபாளத்தைச் சோ்ந்த காமி ரீடா ஷொ்பா, எவரெஸ்ட் சிகரத்தை 32-ஆவது முறையாக ஏறி தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்துள்ளாா். இதேபோல், நேபாளத்தைச் சோ்ந்த லக்பா ஷொ்பா, எவரெஸ்ட் சிகரத்தை 11 முறை ஏறிய முதல் பெண்மணி என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளாா்.
தெலங்கானா இளைஞரின் உத்வேக பயணம்: எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ள தெலங்கானா இளைஞா் துளசி ரெட்டி, தொடக்கத்தில் வெறும் உடல் எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்லத் தொடங்கியுள்ளாா். பின்னா், அதுவே மலையேற்றத்தின் மீதான ஆா்வமாக மாறியுள்ளது.
எல்ப்ரஸ், கிளிமஞ்சாரோ உள்பட பல சிகரங்களை ஏற்கெனவே ஏறியுள்ள இவா், ‘பல ஆண்டுகால ஒழுக்கம், தியாகம் மற்றும் தொடா் பயிற்சியின் விளைவே இந்த வெற்றி’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டாா்.









