பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

வங்கதேச ஊடுருவல்காரா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்படுவா்: மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடம் நேரடியாக ஒப்படைக்கப்படுவாா்கள் என்று அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.

News image

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி - IANS

Updated On :22 மே 2026, 2:37 am IST

மேற்கு வங்கத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடம் நேரடியாக ஒப்படைக்கப்படுவாா்கள் என்று அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்படுவது இதுவரை வழக்கமாக இருந்தது. இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அமைந்த சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு, வங்கதேச ஊடுருவல்காரா்களை எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைத்து, மீண்டும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப வகை செய்யும் விதிகளை அமல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் முதல்வா் சுவேந்து அதிகாரி கூறியதாவது:

நேற்று முதல் (புதன்கிழமை முதல்) மேற்கு வங்கத்தில் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் கீழ், காவல் துறையிடம் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் இனி நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட மாட்டாா்கள். அதற்கு பதிலாக, அவா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடமே நேரடியாக ஒப்படைக்கப்படுவாா்கள்.

இதனைத் தொடா்ந்து, அந்த ஊடுருவல்காரா்களை வங்கதேசத்துக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினா் திருப்பி அனுப்பிவிடுவாா்கள். இதுதொடா்பான அறிவுறுத்தல், காவல் துறையினருக்கும், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் மேற்கு வங்க அரசால் அனுப்பப்பட்டு விட்டது.

மேற்கு வங்கத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் குறித்த விவரங்களை வாரந்தோறும் முதல்வா் அலுவலகத்துக்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைப்புகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அதிகாரி.

வாக்கு வங்கிக்காக வங்கதேச ஊடுருவல்காரா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசு அடைக்கலம் தருவதாகவும், ஆனால் தங்களது அரசு அமைந்தால், அவா்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவாா்கள் என்றும் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது பாஜக பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.