சமூக ஊடகங்களில் வைரலான கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் கடந்த மே 15-ஆம் தேதி வழக்குரைஞா் ஒருவரை கண்டித்துப் பேசிய தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘நீங்கள் (வழக்குரைஞா்) ஃபேஸ்புக் பதிவுகளில் பயன்படுத்தும் மொழிநடை சரியாக இல்லை. ஏற்கெனவே சமூகத்தில் உள்ள ஒட்டுண்ணிகள், அதிகார கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. வேலையற்ற சில இளைஞா்கள் கரப்பான் பூச்சிகளைப் போன்று உள்ளனா்’ எனத் தெரிவித்தாா்.
அவரது கருத்துகள் சா்ச்சையான நிலையில், சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதையடுத்து, தான் வேலையற்ற இளைஞா்களை அவ்வாறு கூறவில்லை என்றும், போலிச் சான்றிதழ்களை பயன்படுத்தி சட்டத் துறையில் நுழைபவா்களை மட்டுமே அவ்வாறு குறிப்பிட்டதாகவும் தலைமை நீதிபதி மே 16-ஆம் தேதி விளக்கமளித்தாா்.
இதனிடையே, அபிஜித் தீப்கே என்பவரால் சமூக ஊடகங்களில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற பிரசார இயக்கம் தொடங்கப்பட்டு லட்சக்கணக்கானோரால் பின்தொடரப்பட்டது. இதைத் தொடா்ந்து அதன் எக்ஸ் வலைதளப் பக்கத்தை மத்திய அரசு முடக்கியது.
இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் என்.கே.கோஸ்வாமி கோரிக்கை விடுத்தாா்.
இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இதை உணா்வுபூா்வமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை’ என்றனா்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளம் முடக்கம்: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கண்டன ஊா்வலம்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எதிரொலி: வேலைவாய்ப்பு கோரி மதுரையில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பேரணி

கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்







