நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலானது விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் தலா 10 பெட்டிகளைக் கொண்ட 35 ஹைட்ரஜன் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு சார்பில் ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
வழக்கமான ரயில்களைப் போலல்லாமல், ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் ரயில்களால் சுற்றுச்சூழல் மாசு ஆகாது. உலகளவில் ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பெட்ரோல், டீசல் போன்ற பிற எரிபொருளால் இயங்கும் ரயில்கள் போன்று புகையை வெளியிடாமல், ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் ரயில்கள் தண்ணீரை மட்டுமே வெளியிடும். இதன்மூலம் கார்பன் உமிழ்வு இருக்காது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜிந்த் –சோனிபட் வழித்தடத்தில், ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலம் மூலம் இயங்கும் 10 பெட்டிகள் கொண்ட ரயிலை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இது 1200 கிலோவாட் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசை அமைப்பின் மூலம் இயக்கப்பட்டு, மணிக்கு அதிகபட்சமாக 75 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலத் தொழில்நுட்பமானது, ஹைட்ரஜனைப் பயன்படுத்தி ஒரு வேதிவினை மூலம் மின்சாரத்தை உருவாக்குகிறது. ஹரியானாவில் உள்ள ஜிந்த்-சோனிபட் பகுதி, இந்தச் செயல்பாடுகளுக்கான முன்னோடி வழித்தடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், புத்தாக்கம், எரிசக்தித் திறன், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான போக்குவரத்து ஆகியவற்றில் இந்திய ரயில்வேயின் பரந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதோடு, இந்தியாவின் பூஜ்ஜிய கார்பன் வெளியேற்ற இலக்குகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
The Central Government has announced that the country's first hydrogen train is set to come into service soon.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











