ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

நீதிக் கதைகள்! கனவும் பலனும்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

News image
Updated On :8 ஜூன் 2026, 4:29 pm IST

ஒரு நகரத்தில் ராமசாமி என்ற பெரிய தொழிலதிபர் ஒருவர் இருந்தார்! அவர் தனது தொழிற்சாலைக்குத் தேவையான மூலப் பொருட்களை வாங்குவதற்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஒரு நாள் இரவு தொழிற்சாலையிலிருந்து நேராக இரயில் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அவர் செல்ல வேண்டிய இரயில்வண்டி இரவு பன்னிரெண்டு மணிக்குப் புறப்பட இருந்தது!

அப்போது அவருடைய தொழிற்சாலைக் காவல்காரன் விரைந்து வந்து அவரிடம் வணங்கி நின்றான்.

"என்ன செய்தி? ஏன் இப்படி வேகமாக வருகிறாய்?''

அவரிடம், "ஐயா! தாங்கள் செல்லும் இந்தப் பயணம் தங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது! நாளை காலை உங்களை ஒரு மனிதர் சந்திப்பது போலவும், அவர் தங்களுக்கு ஒரு பெரிய பரிசைத் தருவது போலவும் நான் இப்போதுதான் கனவு கண்டேன்!'' என்றான்.

வியப்புடன் அவனைப் பார்த்தார் ராமசாமி! இரயில் வண்டிக்கு நேரமாகி விட்டதால் அவர் புறப்பட்டு விட்டார்!

மறு நாள் அவர் செல்லவேண்டிய இடத்திற்கு சென்றார். அங்கு அவர் எதிர்பாராத விதமாக தொழிலதிபர்களின் சங்கத் தலைவர் ஒருவரைச் சந்தித்தார்.

சங்கத் தலைவர் ராமசாமியைப் பார்த்து, "ஐயா தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி! உங்களுக்கு ஒரு நல்ல செய்தி! இந்த ஆண்டு சிறந்த தொழிலதிபருக்கான விருது தங்களுக்குக் கிடைத்திருக்கிறது! இந்த விருது பெருமை வாய்ந்ததாகும்! ரூபாய் ஐந்து லட்சம் இந்த விருதோடு உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் இந்த ஊருக்கு வரும் செய்தியை நான் நேற்று அறிந்தேன். எனவே உங்களை நேரில் சந்தித்து இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்தேன். நிர்வாகத் திறமையும், ஒழுக்கமும், நாணயமும், கட்டுப்பாடும் உள்ள உங்கள் தகுதிக்கு இந்த விருது கிடைத்ததில் எங்கள் சங்கத்தில் உள்ளோருக்கும் மகிழ்ச்சி! விருது வழங்கும் தேதியும், இடமும் பின்னர் உங்களுக்கு செல்லிடப்பேசியில் குறுந்தகவலாக அனுப்புவோம்!''

ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி! புறப்படும்போது தனது காவல்காரன் சொன்னது அவருக்கு நினைவு வந்தது!

வேலை முடிந்து ஊர் திரும்பினார்.

காவல்காரனைச் சந்தித்து, "நீ கூறியது உண்மை....! நீ சொன்னது போலவே, எனக்கு ஒரு நல்ல செய்தி வந்தது! ஆனால் அதற்காக நான் உனக்கு தண்டனைதான் வழங்க முடியும்...! உனக்கு நான் ஐந்து நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன். ஏன் தெரியுமா? வேலை நேரத்தில் தூங்கியதற்காக!...மேலும் எத்தனை நாள் இது மாதிரி தூங்கியிருக்கிறாயோ?'' என்றார்.

"காவல்காரன் தலையைக் குனிந்து கொண்டு, "என்னை மன்னிச்சுடுங்க ஐயா! இனி விழிப்புணர்வோடு இருப்பேன்'' என்றான்.

Summary

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.