சென்னை, ஜன.9- சென்னை முகப்பேரில் உள்ள ஜஸ்வந்த் நகர் பூங்காவில் முகப்பேர் பேட்மின்டன் கழகம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா இன்று நடைபெற்றது.
கிராமத்தையே நகரத்துக்குக் கொண்டுவரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோலப்போட்டியுடன் துவங்கிய விழாவில் மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், நடவுப் பாடல்கள் எனக் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவில் நாட்டுப்புற கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான உறியடித்தல் போன்ற கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
ஏழை பணக்காரர், ஜாதி, மதம், என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து சமூகத்தினரும் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடந்தது. இதில் தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆணையர் பி.ஏ.மணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். "நகரங்களில் இதுபோன்ற கிராமியத்தை நினைவூட்டும் நிகழ்வுகள் அதிகமாக நடக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் மு.இளங்கோவன், நடவுப் பாடல் பாடி அதன் சிறப்பை விளக்கினார்.
தொலைக்காட்சி நடிகை பிரியா, தமிழ் இலக்கிய வழக்கறிஞர்கள் சங்க இணைச் செயலாளர் அனந்த நாராயணன், சித்த மருத்துவர் கு. சிவராமன், சென்னை குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் தர்மன், அம்பத்தூர் நகர்மன்ற உறுப்பினர் கன்னியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகப்பேர் பேட்மின்டன் கழகச் செயலாளர் புவனேஸ்வரன் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.