மீனவர்கள் மீதான தாக்குதல் வழக்கு: செப்.24க்கு ஒத்திவைப்பு
இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட போது, சில உரிமைகள் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டன. அதில் கச்சத்தீவு பகுதியில் வலை உலர்த்துதல், மீன்பிடித்தல்...


மதுரை, ஆக.17: தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையில் தாக்கப்படுவது; அவர்களுக்கு மத்திய கடலோர காவல்படை, கடற்படை பாதுகாப்பு அளிப்பது ஆகியன தொடர்பாக ஸ்டாலின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனு, நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா, எம்.விஜயராகவன் ஆகியோர் அடங்கிய பென்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன் மற்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ரவீந்திரன் ஆகியோரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டார்.
தமிழக மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதால், அடிக்கடி மோதல் நடப்பதாகவும், எல்லை தாண்டிப் போவதால்தான் இலங்கை மீனவர்கள் அவர்களைத் தாக்குகின்றனர் என்றும் மத்திய அரசு வழக்குரைஞர் ரவீந்திரன் கூறினார்.
அதற்கு தமிழக அரசின் நவநீத கிருஷ்ணன், தாக்குதல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் இந்திய எல்லைக்குள் நடந்ததாகவே பதிவாகியுள்ளன. எனவே இதனை ஏற்க இயலாது என்றார். அதற்கு நீதிபதிகள், மீனவர்கள் பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர், கடல் எல்லை நிர்ணயிப்பது தொடர்பாக ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா, எல்லைப் பகுதி நிர்ணய அளவீடுகள் என்ன என்றும் கேட்டார்.
அதற்கு ரவீந்திரன், இந்திய எல்லைப் பகுதி சில இடங்களில் விரிவாகவும், சில இடங்களில் மிகக் குறுகலாகவும் இருப்பதால் இது சிக்கலான ஒன்று என்றார்.
அப்போது மனுதாரர் சார்பில் கச்சத்தீவில் மீன்பிடிப்பது தொடர்பாக குறுக்கீடு செய்யப்பட்டது.
கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட போது, சில உரிமைகள் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டன. அதில் கச்சத்தீவு பகுதியில் வலை உலர்த்துதல், மீன்பிடித்தல் உள்ளிட்டவை அடங்கும் என்றார் பீட்டர் ரமேஷ்குமார்.
இந்நிலையில், ரவீந்திரன் இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் சார்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்றுதான் மீனவர் அமைப்பு சார்பில் தாக்கப்பட்டுள்ளது. எனவே இவை எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரே நாளில் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவற்றை எல்லாம் விசாரித்த நீதிபதிகள், இந்த 6 மனுக்களையும் ஒன்றாகப் பட்டியலிட்டுப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை செப்.24க்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...