விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலில் பகல்பத்து திருமொழித் திருநாள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இவ்விழா இம் மாதம் 23-ம் தேதி வரை நடைபெறும். 24-ம் தேதி பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது.
பதியாய் அவாப்த ஸமஸ்தகாமனாய் ஸர்வரக்ஷகனான ஸர்வேஸ்வரன் ஸகல ஜீவாத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் பொருட்டு நலமந்தமில்லாதோர் நாடாகிய ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தேவர் வேண்டி இரக்கவந்து பிறந்தும், தாம் நினைத்த காரியம் கைகூடப்பெற்றதில்லை. எம்பெருமான் இக்காரியம் நிறைவேறுகைக்குத் தானும், ஸ்ரீபூமிபிராட்டியும், ஸ்ரீபெரிய திருவடி என்கிற ஸ்ரீகருடாழ்வாரும் கூடிப் பிரணவமென, ஸ்ரீபெரிய பெருமாளாகவும், ஸ்ரீஆண்டாளாகவும், ஸ்ரீபெரியாழ்வாராகவும் வந்தவதரித்து கூடப்பெற்று மகிழந்து பின்னானார் வணகங்குமபடி அர்ச்சாவதார திவ்ய மங்கள விக்ரக ரூபனாய் எழுந்தருளியிருக்கும் பெருமை வாய்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர்.
பெரிய பிராட்டியார் ஸ்ரீஜனக மகாராஜன் திருமகளாகத் தோன்றியும் வளர்ந்தும் ஸகல ஜீவாத்மாக்களையும் தனியே வாழ்விக்க பெறாத குறைதீரப் பூமிப்பிராட்டியார் வைகுந்தவான் போகந்தன்னையிகழ்ந்து அஞ்சு குடிக்கொரு சந்ததி எனப் பெரியாழ்வார் திருமகளாகத் திருநந்தவனத்து திருத்துளவச்செடியின் கீழ்த் திருவாடிப்பூரத்தில் அவதரித்தருளினார். அவள் சார்ங்கமென்னும் வில்லாண்ட எம்பெருமானைத் தன் கல்யாண குணங்களாலும் பாமாலை, பூமாலையாலும் சேதனர்களைத் தன்பக்தியாலும் ஆண்டு அதனால் ஸ்ரீஆண்டாள் என்று பெயர் பெற்றாள். நாராயணனே நமக்கே பறைதருவான் என்று கைங்காரியத்தை சர்வேஸ்வரனே தரவேணும் என்று எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமேயாவோம். உனக்கே நாமாட் செய்வோம் என்று இக்கைங்கர்யம் உன் அருகில் இருந்து கொண்டே இவ்வாத்ம தத்துவங்கள் உள்ளளவும் இடைவிடாது செய்ய அருளவேணும் என்றும், மற்றை நங்காமங்கள் மாற்று என்று இத்தகைய கைங்கர்யத்திலும் தனக்கென்ற எண்ணமாகிய களையையும் நீயே அறுத்துத்தர வேணுமென்ற வேதமனைத்திற்கும் வித்தான பொருளை சங்கத் தமிழ் மாலை என்ற பாமாலை பாடிக்கொடுத்து தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம் என்று எம்பெருமானுக்கும் தன் குழலில் சூடிப் பாகவத சம்பந்தமான நறுமணமூட்டி சூட்டிவித்து ஸர்வதந்த ஸர்வரஸ என்ற ஸ்ருதிப் பிரதிபாத்திய ஸித்தனாகையைப் பூமாலையால் சூடிக்கொடுத்தும் ஸம்ஸாரி சேதனர்களை வாழ்விக்க வேண்டி ஓதுவித்தது மான இம்மூன்று காரணங்களாலே வாழ்விக்கச் செய்தருளினாள்.
திருமங்கை மன்னன் பெரியபெருமாளிடத்தில் திருவாய்மொழிக்கு வேத ஸாம்யத்தை பிரார்த்தித்துப் பெற்ற அந்த உத்ஸவத்தை சிறிய திருஅத்யயன உற்சவம் (பகல்பத்தும்), பெரிய திருஅத்யயன உற்சவம் (ராப்பத்தும்) ஆண்டுதோறும் நடைபெறும்.
இதனையொட்டி, ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் சேர்த்தியில் மூலஸ்தானத்திலிருந்து (கோபால விலாசம்) பகல்பத்து மண்டத்திற்கு புறப்பாடு நடைபெற்று, வேதப்பிரான்பட்டர் திருமாளிகையில் பச்சை பரப்பக் கடாக்ஷித்து மண்டபம் சேருதல் நடைபெற்று, அங்கு விண்ணப்பஞ்செய் கோஷ்டி நடைபெற்றது.
மாலை ஸ்ரீபெரியபெருமாள் கருடக வாகனத்திலும், ஸ்ரீபெரியாழ்வார் யானை வாகனத்திலும் ஸ்ரீஆண்டாள் சந்நிதி கல்யாண மண்டபத்தில் திருப்பல்லாண்டுதொடக்கம் நடைபெற்றது.
இரவு மாட வீதிகளில் கண்டருளித் தோளுக்கினியானில் பகல்பத்து மண்டபம் சேர்தல் நடைபெற்று, ஆழ்வார்கள் பகல்பத்து மண்டபம் சேர்ந்து திருத்திரை வாங்குதல் நடைபெற்றது.
உற்சவ நாட்களில் ஒவ்வொரு நாளும் பாசுரங்கள் வியாக்யானம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ச.சுப்பிரமணியம் ஆகியோர் செய்துள்ளனர்.