பிஆர் பழனிச்சாமியின் 13 ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
பிஆர்பி கிரானைட் அதிபர் பிஆர் பழனிச்சாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 13 ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாகின. 2 மனுக்கள் மட்டும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.


பிஆர்பி கிரானைட் அதிபர் பிஆர் பழனிச்சாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 13 ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாகின. 2 மனுக்கள் மட்டும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிஆர்பி கிரானைட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் அதிபர் பிஆர் பழனிச்சாமி. அரசு புறம்போக்கு நிலங்கள், பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் கால்வாய்களை ஆக்ரமித்து சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி திருடிக் கடத்தியதாக பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி, மகன்கள், உறவினர்கள் மீது கீழவளவு, மேலூர், ஒத்தக்கடை மற்றும் மேலவளவு ஆகிய காவல்நிலையங்களில் 35க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 15 வழக்குகளில் தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி பழனிச்சாமி மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மேஜிஸ்ட்ரேட் ஜெயக்குமார், 13 வழக்குகளில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் வெடிபொருள் சம்பந்தமாகவும், சட்டவிரோதமாக அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை அபகரித்ததாகவும், சேதப்படுத்தியதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 13 வழக்குகளையும் விசாரித்து ஜாமீன் வழங்குவதற்கான அதிகாரம் இந்த நீதிமன்றத்துக்கு இல்லை. மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் இந்த வழக்குகளை விசாரித்து முடிவுகளை அறிவிக்க முடியும். எனவே இந்த 13 மனுக்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
மேலும், மேலவளவு காவல்நிலையத்தில் பதிவான நில அபகரிப்பு வழக்கிலும், கீழவளவு காவல்நிலையத்தில் பதிவான மற்றொரு வழக்குத் தொடர்பான ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். மனு மீது விசாரணை அதிகாரி பதிலளிக்குமாறு உத்தரவட்ட நீதிபதி விசாரணையை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சிறை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி : கிரானைட் முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிஆர் பழனிச்சாமி, ஏற்கனவே கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் முன்பு அவரது காவலை நீட்டிப்பதற்காக போலிஸ் வேனில் பழனிச்சாமியை அழைத்து வந்தனர். அபபோது அவருக்கு உடல்நலம் இல்லை என்றும், வழக்கு விசாரணைக்காக தன்னை நீண்ட தொலைவுக்கு போலிஸார் அழைத்து வருவதால் தனக்கு மேலும் உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும், எனவே தன்னை மதுரை மத்திய சிறைக்கு மாற்றுமாறு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான முடிவை நவம்பர் 15ம் தேதிக்கு மேஜிஸ்ட்ரேட் தள்ளிவைத்திருந்தார். அப்போது நீதிமன்றத்தில் இருந்த பழனிச்சாமி சுகவீனம் அடைந்தார். இதையடுத்து மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டதை அடுத்து அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் பழனிச்சாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகக் கூறினர்.
இந்த நிலையில், மருத்துவர்கள் பழனிச்சாமி ஆரோக்கியமாக இருப்பதாக சான்றிதழ் அளித்ததன் அடிப்படையில், பழனிச்சாமியின் சிறை மாற்றக் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...