காதி, கிராமத் தொழில் பொருள்களின் விற்பனையை அதிகரிக்க அவற்றின் தரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என தமிழக ஆளுநர் கே. ரோசய்யா கேட்டுக் கொண்டார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோதய பவனில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது: பொதுமக்களின் தலைவர் மகாத்மா காந்தி. அவர் தனது வாழ்வை ஏழை, எளிய மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தார். காந்தி மக்களுக்கு போதித்த தத்துவங்களின் அடிப்படையிலேயே தமது வாழ்வை அமைத்துக் கொண்டார். கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என கூறினார் காந்தி. கைத்தறி நெசவு மூலம் கிராம மக்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த காந்தி விரும்பினார்.
அனைவரும் கைத்தறி துணிகளை அணிய வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு அரை மணி நேரமாவது கைத்தறி மூலம் நூல் நூற்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்ட நான் எனது கல்லூரி நாள் முதல் தைத்தறி ஆடைகளையே அணிந்து வருகிறேன். கைத்தறி ஆடைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை ஆகும். கைத்தறி ஆடைகள் வாழ்வின் எளிமையையும், தூய்மையையும் எடுத்துரைக்கும் என்று ஆளுநர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.