உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும், ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. தற்போது காவிரியில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கும் நீர் கர்நாடக அணைகளில் தேக்கி வைக்க முடியாத மிகை உபரி நீராகும். நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடகம் திறந்துவிட்ட நீர் அல்ல. அன்றன்றைக்கு உள்ள பருவ நிலையை பார்த்து உச்சநீதிமன்றம் நிலைப்பாடு மேற்கொள்வது வியப்பளிக்கிறது. நடுவர் மன்ற தீர்ப்பின்படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை நிறுவ மத்தியஅரசு மறுத்து வருகிறது. நடுவர் மன்றத் தீர்ப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு இணையானது. அதனை செயல்படுத்த ஆணையிட வேண்டிய உச்சநீதிமன்றம் தற்போது தண்ணீர் வருவதை காரணமாக காட்டி தன் கடமையிலிருந்து நழுவுவது பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது. எனவே தமிழகஅரசு மத்தியஅரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விரைந்து செயல்பட வேண்டும் என கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்