சிதம்பரம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பெண் பக்தர்கள் இறந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அடுத்த சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை நள்ளிரவு நள்ளிரவு 12 மணிக்கு மேல்மருவத்தூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பேருந்தும், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியிலிருந்து மருத்துவத்தூர் சென்ற தனியார் மினி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இவ்விபத்தில் மினி பேருந்தில் பயணம் செய்த வால்பாறை வாட்டர் ஃபால்ஸ் 2வது டிவிஷன் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (60), இவரது மகள் கிருஷ்ணவேணி (35), அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி (14) மூவரும் இறந்தனர்.
மேலும் பொள்ளாட்சி ஆயர்பாடியைச் சேர்ந்த மினி பேருந்து டிரைவர் ரவி, அவருடன் பயணம் செய்த பொள்ளாட்சி சேரன் நகரைச் சேர்ந்த வீரமணி மனைவி வனதேவி (35), வால்பாறை வாட்டர் ஃபால்ஸ் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு மனைவி காந்தி (37), வையாபுரி மனைவி புஷ்பம் (58), பழனிசாமி மனைவி செல்வி (35), மணிகண்டன் மகள் நித்யபிரியா (20), பாலு மகன்கள் மணி (18), அருண்குமார் (10) மற்றும் தனலட்சுமி (45) உள்ளிட்டோர் கவலைக்கிடமான நிலையில் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிதம்பம் கூத்தங்கோயில் பகுதியிலிருந்து மேல்மருவத்தூர் சென்று திரும்பிய தனியார் பேருந்து டிரைவர் ரஞ்சித் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் உள்ளிட்ட 45 பேர் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை மற்றும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தினால் திங்கள்கிழமை நள்ளிரவு கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுரேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் சிவராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் காயமுற்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.