சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ஜெகதீஷ்ஷெட்டரை முன்னிலைப்படுத்த அக்கட்சியின் மாநில உயர்மட்டக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தலைமையிலான பாஜக அரசை கவிழ்க்க, அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், கர்நாடக மாநில பாஜக உயர்மட்டக்குழு கூட்டம், பெங்களூரில் நடைபெற்றது. கட்சியின் மூத்தத்தலைவர் வெங்கையாநாயுடு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், முன்னாள் முதல்வர் சதானந்தகௌடா, துணைமுதல்வரும், மாநிலத்தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, துணைமுதல்வர் ஆர்.அசோக், தேசியபொதுச்செயலாளர் அனந்த்குமார், மேலிடப்பொறுப்பாளர் தர்மேந்திரபிரதான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்காக, எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி உயர்மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. எடியூரப்பாவின் அரசியல் தந்திரங்கள் குறித்து கவலைப்படாமல் சட்டப்பேரவை தேர்தல் பணிகளை கவனிக்க தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. தேர்தல் பிரசாரம், அதற்கான வியூகம் குறித்து இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த கூட்டங்களுக்கு பிறகு செய்தியாளர்களிடம், கட்சியின் பொதுச்செயலாளர் பிரகலாத்ஜோஷி கூறியபோது: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான தயாரிப்புகளில் ஈடுபட உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சட்டப்பேரவை தேர்தலை முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தலைமையில் சந்திக்கவும் தீர்மானித்துள்ளோம். அதாவது, பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ஜெகதீஷ்ஷெட்டரை தேர்ந்தெடுத்துள்ளோம். இதற்கு பாஜக நாடாளுமன்றக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.