மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மீண்டும் பணிவழங்க வேண்டும் என்ற ஓர் அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 8-ம் தேதி மதுரை பழங்கநத்தத்தில் கோரிக்கை மாநாடு நடைபெற இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நல்.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.
இது குறித்து விருதுநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை எந்தவித காரணம் இல்லாமல் அரசு ஒரே உத்தரவில் பணிநீக்கம் செய்தது. இவர்களில் பாதிப்பேர் வரையில் பெண்கள் என்பதும், அனைவருமே 40 வயதை கடந்தவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் மாற்றுப்பணிக்கும் செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது. அதேபோல், பணி நியமனம் பெற்றும் கடந்த 17 ஆண்டுகளில் இரண்டு முறை பணிநீக்கம் செய்யப்பட்டும், தற்போது மூன்றாவது முறையாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், இவர்களை தவிர எவரும் இருக்க முடியாது.
எனவே இதுவரையில் மீண்டும் பணிநியமனம் வழங்கக் கோரி அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கடந்த மே-4ல் திருவாரூரில் நடந்த மாநில பிரதிநிதித்துவ பேரவை மாநாட்டில், ஜூன்-8ம் தேதி பணியில் தொடர வலியுறுத்தி மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற ஒர் அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை மாநாடு மதுரை பழங்கநத்தத்தில் குறிப்பிட்ட நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டில் மாநில அளவிலான அனைத்து அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நல்.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.
அப்போது உடன் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீமான், அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருள்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.