கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பள்ளி வாகனங்களின் ஆய்வுப் பணி செப்டம்பர் 5, 6-ம் தேதிகளில் மாவட்ட துணை ஆட்சியர் சங்கர்லால் குமாவாத் தலைமையில் நடைபெறுகிறது.
இது குறித்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகளின் படி மாவட்ட கண்காணிப்புக் குழு மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின்படி துணை ஆட்சியர் சங்கர்லால் குமாவாத் தலைவராகவும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செயலராகவும், முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்த கண்காணிப்புக் குழுவில் உள்ள அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து அனைத்துப் பள்ளி வாகனங்களையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
மேலும், செப்டம்பர் 5-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பள்ளி வாகனங்கள் நாகர்கோவில் எஸ்.எல்.பி மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும், செப்டம்பர் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பள்ளி வாகனங்கள் குழித்துறை வாவுபலி பொருள்காட்சி மைதானத்திலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே மாவட்டத்தில் உள்ள பள்ளி நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் தங்கள் பள்ளியில் உள்ள வாகனங்களை குறிப்பிட்ட நாள்களில், குறிப்பிட்ட இடங்களில் தவறாது கலந்து கொள்ள வேண்டப்படுகிறது. இந்த ஆய்வுப் பணியில் மேற்குறிப்பிட்ட அனைத்து உயர் அதிகாரிகளும் இணைந்து ஆய்வு செய்ய உள்ளனர் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.