விருதுநகர் மாவட்டத்தில் பெண்கள் மீதான குடும்ப வன்முறை வழக்குகளில் நீதியும், நிவாரணமும் கிடைக்கும் வகையில் மகளிர் நீதிமன்றத்தை விரைவில் தொடங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த வரதட்சணை எதிர்ப்பு மாநாட்டி்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெண்கள் மீதான வரதட்சணை உள்ளி்ட்ட சமூக கொடுமைகளுக்கு எதிராகவும், மாநில அரசு விரிவான பிரச்சாரம் செய்ய வலியுறுத்தியும் வரதட்சணை எதிர்ப்பு மாநாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாநில குழு உறுப்பினர் அ.சேகர் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஜே.ஜே.சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி பேசினார்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.லட்சுமி வாசித்தார்.
வரதட்சணையின் பேரால் பெண்கள் மீது தொடுக்கப்படுகிற தாக்குதல்கள் அதிகரித்து வருவதோடு, ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு பெண் இக்கொடுமையால் கொல்லப்படுகிறாள் என புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதால், இதை தடுக்க வரதட்சணை சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும்.
நாகரீகம், கல்வி, கலாச்சாரம் என எல்லாம் வளர்ந்த இந்த காலகட்டத்திலும் பெண்கள் மீதான சமூக கொடுமைகள் ஏற்படுவது அனைவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்துவதால் இதுபோன்ற சமூக கொடுமைகளுக்கு எதிராக மாநில அரசு விரிவான பிராச்சாரம் செய்ய வேண்டும்.
பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு வரதட்சணை கொடுக்கவோ, வாங்கவோ மாட்டோம்
உறுதிமொழி ஏற்க வேண்டும். இந்த மாவட்டத்தில் கடந்த 2011-ல் 33, 2012ல்-36, 2013-44 என வழக்குகள் அதிகரித்து வருவதாலும், பெண்கள் மீது குடும்ப வன்முறை வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாலும் பெண்களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், இந்த மாவட்டத்தில் விரைவில் பெண்களுக்கான தனி நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









