பள்ளித்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் வெளியூர் செல்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொன்னமராவதி காவல் துணைக்கண்காணிப்பாளர் து.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, வெளியூர் செல்பவர்கள் தங்களது வீடுகளை தரமுள்ள பூட்டுக்களினால் பூட்டிச்செல்லவேண்டும். வீடு திரும்பும் வரை தற்காலிகமாக வாட்ச்மேன் நியமிப்பது நல்லது. அருகிலுள்ள காவல்நிலையங்களில் தகவல் அளித்து செல்லவேண்டும். வீட்டில் உள்ள நகைகள், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருள்களை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்து விட்டு செல்லவேண்டும். வீட்டில் விளக்கு எரிய செய்யவேண்டும். அவ்வப்போது பக்கத்து வீட்டினருடன் தொடர்பு கொண்டு வீட்டின் நிலவரம் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அதுபோல தெருக்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாடினால் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும். மேலும் கோடை கால திருட்டை தவிர்க்கும் வகையில் இரவு காலங்களில் ரோந்துப்பணி அதிகரிக்கப்படும் என்றார்.