எல்லா ஊரும் எம் ஊர், எல்லா மக்களும் எம் உறவினரே என்ற மனோபாவம் வந்துவிட்டால் உலகில் சண்டை சச்சரவே இருக்காது. சேக்கிழார், கம்பன், வள்ளுவன் ஆகியோர் தங்களது காப்பியத்தில் உலகை முதல்வரியில் குறிப்பிட்டு எழுதியுள்ளனர். இது உலகத்தின் வழிகாட்டியாக நாங்கள் திகழ்கிறோம் என்பதை காட்டுகிறது. கணியன் பூங்குன்றனார் தனது பாடலில் நன்மை, தீமை அடுத்தவரால் வருவதில்லை. நம்மால்தான் வருகிறது என்கிறார். நன்மை செய்தால், நன்மை வரும், தீமை செய்தால் தீமை வரும் என்கிறார் புலவர். பிரபஞ்சம் தொடங்கிய காலத்திலிருந்து மரணம் தொடருகிறது. உலகில் மரணம் மட்டும்தான் உறுதியானது. எனவே பெரியவரை கண்டு வியக்காதீர், சிறியவரை இகழாதீர் என பூங்குன்றனார் ஒரே பாடலில் வழிகாட்டியுள்ளார்.